போர் வரட்டும்.. 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்.. மன்னிச்சுருங்க வர மாட்டேன்.. புதிராக மாறிய ரஜினி!
சென்னை: போர் வரட்டும், 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்னு சொன்னது முதல் மன்னித்துவிடுங்கள் வர மாட்டேன் என மாறி மாறி பேசியது வரை நடந்தது என்ன?
கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 1996-ஆம் ஆண்டு வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த், அதன் பின்னர் பாமக வேட்பாளர்களுக்கு எதிராக ஒரு முறை வாய்ஸ் கொடுத்ததுடன் சரி.
அதன் பிறகு அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேசவே இல்லை. ஆனால் முடி நரைத்த பிறகும் அவரை ரசிகர்கள் அழைத்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினி இன்று திடீரென வரமாட்டேன் என சொல்லியுள்ளார். இதன் பின்னணியை பார்ப்போம்.
டிசம்பர் 31-ஆம் தேதி 2017- போர் வரட்டும், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.
ஜனவரி 1, 2018- ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இந்த மக்கள் மன்றத்திற்கு ஆட்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்றன.
மார்ச் 6, 2018- எம்ஜிஆராக யாராலும் வர முடியாது, இனி பிறந்துதான் வர வேண்டும். ஆனால் எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை என்னால் தர முடியும் என எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசியிருந்தார்.
ஏப்ரல் 17, 2019- ரஜினியை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு கேட்டார் கமல்ஹாசன்.
அரசியலுக்கு வராட்டி 4 பேர் நாலு விதமா பேசுவாங்க.. அதுக்காக யாரையும் பலிகடாவாக்க விரும்பலை.. ரஜினி
டிசம்பர் 8, உள்ளாட்சி தேர்தலில் ரஜினி தனது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என கூறியதோடு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்போருக்கு உங்கள் வாக்கை அளியுங்கள் என்றார்.
அக்டோபர் 29, 2020- அரசியலுக்கு ரஜினி வரமாட்டார் என்பது போன்ற ஒரு அறிக்கை பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை இல்லை, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்றார் ரஜினி.
நவம்பர் 30, 2020- ரஜினி மக்கள் மன்றத்தினருடன் ரஜினிகாந்த் தனது உடல்நலம் குறித்து ஆலோசனை செய்தார். கொரோனா நேரத்தில் நான் எப்படி அரசியலுக்கு வருவது என கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவித்தன.
டிசம்பர் 3- வரபோகின்ற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெறுவோம், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31-இல் தேதி அறிவிப்பு என்றார்.
டிசம்பர் 29- எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நான் அரசியலுக்கு வரபோவதில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என அறிக்கை வெளியிட்டு முழுக்கு போட்டுவிட்டார் ரஜினி. இதன் மூலம் 30 ஆண்டுகள் எதிர்பார்ப்பு அஸ்தமனமாகிவிட்டது.