ரீல் கதாநாயகன் என்ற கமெண்ட் தேவையற்றது.. நடிகர் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் வைத்த பரபரப்பு வாதம்!
சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி ரத்து செய்ய கோரிய வழக்கில் தன்னை தேசதுரோகியாக கூறியது தவறு என்றும் தனி நீதிபதியின் இந்த கருத்துகள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடபட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அத்துடன் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
Rolls Royce car: நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதியின் விமர்சன கருத்துகள் நீக்கம்- ஹைகோர்ட் தீர்ப்பு

இடைக்கால தடை
அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையிட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

தனி நீதிபதியின் உத்தரவு
தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக் கோரிய இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வில் கடந்த இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகினார். நிலுவை வரித்தொகையான 32 லட்சத்தை 30 ஆயிரத்தை கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நடிகர் விஜய் செலுத்திவிட்டார். அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டது.

வசூலிப்பதா வேண்டாமா
எனவே நடிகர் விஜய்க்கு எதிரான நீதிமன்ற கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் என வாதிட்டார். மேலும் அவர் வாதிடுகையில் , நுழைவு வரி வசூலிப்பதா? வேண்டாமா? என்பது 20 ஆண்டுகளாக இருந்த பிரச்சனை. சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசுதான் சட்டம் இயற்ற முடியும். இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது மீதமுள்ள 80 சதவீதமும் செலுத்தப்பட்டது.

வழக்கு ஆவணங்கள்
நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என தனி நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார் அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று விஜய் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். நடிகர்கள் நுழைவு வரி செலுத்தவதில்லை. வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றது என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.

விஜய் தரப்பு
கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் வாதிட்டார். சினிமாத் துறை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், வரி ஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை என்றும், மற்றவர்களைப் போல தானும் வழக்கு தொடர்ந்ததாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு. நீதிபதியின் கருத்துக்கள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கடும் கருத்துகள்
நீதிபதிகள் கடும் கருத்துக்களை தெரிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சில வழக்குகளில் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துபவரை ஆய்வு செய்யலாம். அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம். ஆனால் இந்த வழக்கில் தேவையில்லை. வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். மேலும் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் விஜய்யை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது. குற்றவாளி போல காட்டியுள்ளது. இவ்வாறு விஜய் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது.