25 ஆண்டுகளுக்கு முன்பு.. போயஸ் தோட்டம் சுற்றி வளைக்கப்பட்டு.. ஜெயலலிதா கைதான நாள் இன்று!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட கலர் டிவி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
கலர் டிவி ஊழல் உள்ளிட்ட 7 வழக்குகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது போடப்பட்டன. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அமைச்சரவை தொடங்கி சசிகலா வரை பலரும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.
34 ஆண்டுகள் நட்பு.. ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா முதல்முறையாக அஞ்சலி!
எதிர்க்கட்சிகள்
ஜெயலலிதா மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என மூப்பனாரின் தமாகா உள்ளிட்ட கூட்டணி, எதிர்க்கட்சிகள் முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கேள்விகளை எழுப்பினர். இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என நிலை இருந்தது. இதையடுத்து ஜெயலலிதா 7 வழக்குகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக முன் ஜாமீன் கோரினார்.
முன் ஜாமீன் மனு ரத்து
அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் 7 வழக்குகளுக்கும் தனித்தனியே முன்ஜாமீன் கோரினார். மீண்டும் அந்த 7 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜெயலலிதாவை கைது செய்ய திமுக அரசு தயாரானது. அவரை கைது செய்தால் நிச்சயம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே அந்த பிரச்சினையை கையாளவும் திமுக அரசு தயார் நிலையில் இருந்தது.
ஜெயலலிதா போயஸ் தோட்டம்
1996ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி காலையிலேயே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் சுற்றி வளைக்கப்பட்டது. பின்னர் அரஸ்ட் வாரண்டை எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே காவல் துறை உயரதிகாரிகள் நுழைந்தனர். இதையடுத்து பூஜையை முடித்துவிட்டு வருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். அது வரை வீட்டு வளாகத்தில் போலீஸார் காத்திருந்தனர்.
காவல் துறை வாகனம்
இதையடுத்து ஜெயலலிதா பூஜை செய்துவிட்டு காலை சிற்றுண்டியை சாப்பிட்டு தேவையான துணிகளை பெட்டியில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது போயஸ் கார்டனை சுற்றியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறிவிட்டு தொண்டர்களுக்கு கை அசைத்துவிட்டு காவல் துறை வாகனத்தில் புறப்பட்டார்.
28 நாட்கள் சிறைவாசம்
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 2529 என்ற கைதி எண் வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா சாதாரண கைதி போல் நடத்தப்பட்டார். சாதாரண உணவே வழங்கப்பட்டது. கொசு கடியில், கூவம் ஆற்றங்கரையோரம் இருந்த மத்திய சிறையில் சிறைவாசம் செய்தார்.
ஜாமீன் கிடைத்தது
அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி சிவப்பா அதிரடியாக ஜாமீன் வழங்கும் அமர்விலிருந்து மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் ஜாமீன் வழங்கும் பெஞ்சுக்கு புதிய நீதிபதியாக ஜி.ரங்கசாமி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஏ.சாமி எடுத்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை வீசத் தொடங்கியதை உணர்ந்த திமுக அரசு ஜெயலலிதாவின் ஜாமீன் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை என்ற முடிவை எடுத்தது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கினார். மொத்தம் 28 நாட்கள் ஜெயலலிதா சிறையில் இருந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிகழ்ந்த போதிலும் தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிபெருக்குடன் அதை இன்றும் நினைத்து பார்த்து மனம் வருந்துகிறார்கள்.