ஜாமீன் மனுக்கள், ஆட்கொணர்வு மனுக்கள், சிறு குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க ஹைகோர்ட் ஒப்புதல்
சென்னை: ஜாமீன் மனுக்கள், ஆட்கொணர்வு மனுக்கள், சிறு குற்ற வழக்குகளில் தண்டணையை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியிடம் முறையிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 4400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. வெறும் நான்கு நாட்களில் 2000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 621 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் தான் இந்த எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது.கொரோனா பரவலை தடுக்க சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதாரண குற்ற வழக்குகளில் சிறையில் உள்ளவர்களின் வழக்குகளை விரைந்து விசாரிக்க கீழமை நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி ஏபி சாஹி பதிலளித்துள்ளார். இந்த தகவலை பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.