வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி: விரிவான செயல்திட்டத்தை வகுக்க அரசுக்கு ஹைகோர்ட் அறிவுரை
வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும், அதேநேரம் அனைத்தும் இலவசம் என்ற எண்ணத்தை அரசு ஏற்படுத்திவிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான விரிவான திட்டம் வகுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் தாத்தையாம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை வீடில்லா ஏழைகளுக்கு மனையாக வழங்க உத்தரவிடக் கோரும் வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், கடையாம்பட்டி தாலுகாவில் உள்ள தாத்தையாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடில்லா ஏழை மக்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவர் கருமலை வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட அந்த நிலம், பள்ளி கட்டிடம் கட்ட ஒதுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தாரரால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மக்கள் நல அரசு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டுமென அறிவுறுத்தினர். அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் தெளிவுபடுத்தினர். வீட்டு மனை ஒதுக்க கோரி மீண்டும் புதிதாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
அதேசமயம் தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை மக்களுக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதற்காக மாவட்டவாரியாக நிலங்களை அடையாளம் காணவும் வலியுறுத்தினர்.
மளிகைக்கடையில் தீபாவளி பட்டாசு விற்றதால் விபத்து...சுக்குநூறான கட்டிடம் - 6 பேர் பலி, பலர் படுகாயம்
மனுதாரர் கூறும் நிலத்தில் பள்ளி கட்டுவதற்கு ஒதுக்க கோரி வட்டாட்சியரால் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. வீடற்ற ஏழைகளுக்கு நிலம் அல்லது வீடு வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.