ஹைகோர்ட் போட்ட போடு. அப்படீன்னா "சர்கார்" கேட்ட கேள்விகள் எதுவும் தப்பில்லையே??
சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு இலவசம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.
Recommended Video
சென்னை: அப்படின்னா இலவசங்கள் பற்றி "சர்க்கார்" படத்தில் கேட்ட கேள்விகள் எல்லாம் தப்பு இல்லையே?
பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. இது சம்பந்தமான ஒரு வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், "உங்கள் திட்டத்துக்கு கட்சிப் பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம்.
ஆனால் அரசு பணத்தை எதற்காக செலவிடுகிறீர்கள், எந்த நோக்கத்துக்காக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவிடலாமே" என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது.
கொளுத்தப்பட்டன
இதே போன்று இலவச பொருட்களுக்கு எதிரான ஒரு கருத்தைதான் சர்க்கார் படத்தில் வலியுறுத்தப்பட்டது. இலவசங்களை தருவதற்கு பதில் மக்களுக்கு உபயோகமான முறையில் அரசு பணத்தை செலவழித்தால் நன்றாக இருக்குமே என்ற ரீதியில் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. மேலும் அந்த கருத்தினை வலிமைப்படுத்த அரசு கொடுத்த இலவச பொருட்களை தூக்கி வீசியும், எறிந்தும், கொளுத்தியும் பல சீன்கள் வைக்கப்பட்டன.
காட்சிகள் நீக்கம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அமைச்சர்கள் முதல் அதிமுக தொண்டர்கள் வரை பொங்கியெழுந்தார்கள். கோர்ட் வரை போய் கேஸ் போட்டார்கள். நல்லா ஓடக்கூடிய படத்தை ரொம்ப ரொம்ப நல்லா ஓட வைத்தும் விட்டார்கள். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கும்படி உத்தரவு வந்ததும், அதனை மதித்து முருகதாஸ் நீக்கவும் செய்தார். ஆனால் அப்போதுகூட முருகதாஸ் தன் நிலைப்பாட்டில் உறுதியாகதான் இருந்தார்.
காம்ப்ரமைஸ்
இந்த விஷயத்தில் யாருக்காகவும்,, எதற்காகவும், தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவே இல்லை. அன்று முருகதாஸ் படத்தில் எழுப்பிய கேள்வியைதான் இன்று நீதிபதிகள் கேட்டுள்ளார்கள். "நாங்கள் ஆட்சி அமைத்தால், ரூபாய்க்கு மூன்று படி அரிசி!" என்ற அறிவிப்பினை பேரறிஞர் அண்ணா அறிவித்த காலகட்டம் வேறு. இப்போதுள்ள காலகட்டம் வேறு. அன்றைய தொழில்நுட்பம், கல்வி வளர்ச்சிக்கும் இப்போதுள்ளவைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
பொது சொத்துக்கள்
இன்றைய நிலையில் தேர்தல் களத்தில் பிரச்சார பீரங்கியாக உள்ள இலவசங்கள் எதற்கு என்பதுதான் முருகதாஸ் கேள்வி மட்டுமல்ல, நீதிபதிகளின் கேள்வியும்கூட. தங்கள் கோபத்தை அன்று பொது சொத்துக்கள் மீது காட்டிய அதிமுக தொண்டர்கள், இன்று நீதிபதிகளின் கேள்விக்கு என்ன பதில் நடவடிக்கை செய்ய போகிறார்கள்?
என்ன பதில்?
முருகதாஸ் என்ற ஒற்றை மனிதரை அடக்கிவிட்டோம் என்ற ரீதியில் நிம்மதி பெருமூச்சுவிட்ட அதிமுகவினர் இப்போது இலவசங்கள் எதற்கு என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? என்றெல்லாம் தெரியவில்லை.
ஆரோக்கியமான ஜனநாயகம்
ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது, எதிர்கால தமிழகத்திற்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படுகின்ற திட்டங்களாக இல்லாமல் தங்களுக்கு ஓட்டுப்போடும் வாக்காளர்களை பற்றி மட்டுமே இந்த அரசியல் கட்சிகள் கவலைப்படுகின்றன. இது அடிப்படையான அரசியல் தர்மத்திற்கும், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும் நேர் எதிரானதாகும்.