ஓசூர் அருகே விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க இடைக்கால தடை.. ஹைகோர்ட்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சேவகாணபள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க தடைவிதிக்க கோரிய வழக்கில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கட ரெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் "தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு துணை மின் நிலையம் அமைப்பதற்காக சேவகாணபள்ளி கிராம விவசாய நிலங்கள் மீது உயர் கோபுரம் அமைத்து உயர் மின் அழுத்த கம்பியை தனியார் தொழிற்சாலைக்கு எடுத்து செல்வதால் தங்களின் விவசாய நிலங்கள் சேதமாகுவது மட்டுமல்லாமல் விவசாயம் பாதிப்புக்குள்ளாகி விலை நிலங்களுக்கு சந்தை விலை மதிப்பு இழந்து பெரும் பொருள் நஷ்டம் ஏற்படும்.
யாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி
ஏற்கனவே தமிழகத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவும் விளைச்சல் அளவும் குறைந்துகொண்டே வரும் சூழலில் இப்படி உயர் மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகளை பாதிப்புள்ளாக்கும் என்றும் எனவே விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்
இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் பரந்தாமன் வாதிடுகையில் தற்போது அரசு தீர்மானித்து இருக்கும் வழித்தடம் குறிப்பிட்ட இலக்கை அடைய சுமார் 10 கி மீ தூரம் மின் கம்பியை எடுத்துச் செல்வதால் விவசாய நிலங்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும் அரசுக்கு மிகப்பெரிய பொருள் செலவாகும்.
எனவே கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனுதாரர்கள் அளித்துள்ள மாற்று வழித்தட திட்ட முன் மொழிவை செயல் படுத்துவதின் மூலம் அரசு நினைக்கும் இடத்திற்கு வெறும் 3 கி மீ தூரத்தில் உயர் மின் கம்பியை எடுத்துச்சென்றுவிடலாம். இதன் மூலம் மிக சொற்ப விவசாய நிலங்களே பாதிப்புக்குள்ளாகும் அரசிற்கு குறைந்த பொருள் செலவே ஏற்படும். எனவே மாற்று பாதை திட்டத்தை அமல் படுத்தகோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என பரந்தாமன் வாதிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள மாற்று வழி பாதை முன்மொழிவு குறித்து அரசிடம் உரிய கருத்து பெறும்படியும் அதுவரை மனுதாரர்கள் விவசாய நிலங்களில் மின் அழுத்த உயர் கோபுரம் அமைக்கக்கூடாதெனவும் தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும் உத்தரவிட்டு வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்