பி.இ அரியர் தேர்வுகள் ரத்துக்கு எதிரான வழக்கு - தமிழக அரசு பதில் தர ஹைகோர்ட் நோட்டீஸ்
மத்திய மாநில அரசுகள், பல்கலைகழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை: அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கில் மத்திய மாநில அரசுகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலை அறிவியல் பொறியியல் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றை காப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடைய செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் அரசின் முடிவு உள்ளதாகவும், 25 சதவிகித மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் மேலும் குறையும் நிலை உருவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பாவம்யா... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க
தேர்வுகளில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அவர்களிடம் பிரதிபலிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்வு நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவை உள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்தது தவறு என குறிப்பிட்டுள்ளார்.
அரசின் முடிவை கைவிடக்கோரி ஆகஸ்ட் 28ஆம் தேதி மனு அளித்தும் பலனில்லாததால், உடனடியாக அரசின் முடிவுற்கு தடைவிதிக்க வேண்டுமென்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாலகுருசாமி வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள், பல்கலைகழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்குடன் இணைத்து பட்டியலிடவும் அறிவுறுத்தி உள்ளனர்.