ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தாவின் வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வேதாந்தா வழக்கை தான் விசாரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகி உள்ளார். இதையடுத்து ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, அதற்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.
போலீசார் கலவரக்காரக்கார்களை ஒடுக்குவதாக கூறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல்வைத்து உத்தரவிட்டது தமிழகஅரசு. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியயோர் அமர்வு விசாரிக்கும் என பட்டியலிட்டு இருந்தது இந்த வழக்கை விசாரிக்க தான் விரும்பவில்லை என நீதிபதி சசிதரன் ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து விலகி உள்ளார். இதனால் உயர்நீதிமன்ற பதிவாளர் வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.