ஸ்ரீ ரங்கநாதருக்கு ஆகமவிதிப்படி பூஜை நடத்த குழு - அறநிலையத்துறைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உற்சவங்கள், பூஜைகள் நடத்த குழு அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: லாக்டவுன் காலத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆகம விதிகளின்படி, உற்சவங்கள், பூஜைகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்க கோரி சுவாமி ரங்கநாதர் சார்பில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவுக்கு 3 வாரத்தில் பதிலளிக்க தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கோவில்கள், மூடப்பட்டன. தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோவில்களை பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆகம விதிகளின்படி, உற்சவங்கள், பூஜைகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்க கோரி சுவாமி ரங்கநாதர் சார்பில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் கோவில் திறக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள போதும், பூஜைகள், உற்சவங்கள், சடங்குகள் நடத்த எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலின் மதம் சார்ந்த விவகாரங்களில் அறநிலைய துறை ஆணையரும், கோவில் இணை ஆணையரும் தலையிட தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குட்கா : திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க அறநிலைய துறைக்கும், கோவில் இணை ஆணையர் மற்றும் அறங்காவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.