மலேசியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள்.. பதிலளிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மலேசியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
கொரோனா பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் சிக்கியுள்ள 350 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித்கோத்தாரி மற்றும் புஷ்பா சத்யநாரயணா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா.. ஹைகோர்ட் கேள்வி
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி இந்தியா திரும்பி வர வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் 30,000 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதாகவும் எந்த கட்டணமும் இல்லாமல் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி. ராஜகோபால் இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை மே 11 ம் தேதி ஒத்திவைத்து மலேசியாவில் சிக்கித் தவிப்பவர்கள் மீட்பது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து உரிய பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.