தருமபுரியில் ஆழ்துளை கிணறுகள் தோண்ட தடை கோரி ஹைகோர்ட்டில் வழக்கு - கலெக்டர் பதில் தர உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் அரசு சார்பில் ஆழ்துளை கிணறுகளை தோண்ட தடை விதிக்கக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் அரசு சார்பில் ஆழ்துளை கிணறுகளை தோண்ட தடை விதிக்கக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் சார்பில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை தோண்ட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தர்மபுரியை சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், வெள்ளாலப்பட்டி, பொம்முடி, துஞ்சிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் மஞ்சள் விவசாயத்தை கிணற்று பாசனம் மூலமாக செய்து வருகின்றனர்.
கடும் வறட்சி காரணமாக கிராம மக்களே இணைந்து 4 கி.மீ சுற்றளவில் உள்ள நீர் ஆதாரங்களை தூர்வாரி விவசாயம் செய்து வருகிறோம். போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாததால், விவசாயத்தை நம்பிய மக்களை மாற்று வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர்.
இந்நிலையில், துஞ்சிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி கிராம பஞ்சாயத்து சார்பாக நீர் ஆதாரங்களில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிதண்ணீர் கிடைத்து வரும் நிலையில், குடிநீர் வசதிக்காக தோண்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சி- கொரோனா களப் பணியில் தீரமுடன் பணியாற்றும் 3,500 FOCUS களப் பணியாளர்கள்
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளை பராமரிப்பதன் மூலமாக மக்களுக்கு தேவையான குடிநீரை பெற முடியும். அதனால் அரசு மற்றும் தனியார் சார்பில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை தோண்ட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜராகி வாதிட்டார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.