பிஎஸ்என்எல் முறைகேடு.. மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கை நான்கு மாதங்களுக்குள் சிபிஐ நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்றும் ஹைகோர்ட் காட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகள் முறைகேடாகப் பெறப்பட்டதாகவும், இதனால், மத்திய அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகவும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனிச் செயலர் கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.
AIADMK vs AMMK: அஇஅதிமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்
இதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவை புதிதாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கிய ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்னும் 4 மாதங்களுக்குள் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் மாறன் சகோதரர்களை கைது செய்து விசாரிக்கலாம் என்றும் கூறினார்.