சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் வருமா? நாளை மறுநாள் ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் 8ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
மத்திய அரசு உதவியுடன், சென்னை-சேலம் நடுவே 8 வழி பசுமைக் காரிடார் திட்டத்தை கொண்டுவருவதாக தமிழக அரசு அறிவித்தது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக ஆரம்பித்தன. ஆனால், விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பரவலாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதல்.. முன்னாள் எம்எல்ஏ, மனைவி உள்பட 3 பேர் பலி
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து ஹைகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கப்பட்டது. திட்டத்தை எதிர்த்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளையும் ரத்துசெய்ய வழக்கில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கில், பதில் அளித்தபோது, திட்ட அனுமதி கொடுத்த பிறகுதான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்கு முன்பாக தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 8ம் தேதி, திங்கள்கிழமை, வெளியாக உள்ளதாக நீதிமன்ற அலுவல்களில் இன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு 5 மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.