பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சல் உணவில் கொள்ளையா?.. பயணியின் புகாருக்கு ரயில்வே விளக்கம்
சென்னை: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 கிராம் பொங்கல் ரூ 80க்கு விற்பனை செய்யப்பட்டதாக பயணி ஒருவர் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார்.
கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ரயில், விமானம், பேருந்து போக்குவரத்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் பேருந்துகளும் , ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படுகின்றனர்.
அதிமுக குழப்பங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் அதிரடி பதில்.. ஏற்கப்பட்டதா கோரிக்கை?
பொங்கல்
இந்த நிலையில் நேற்று காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐஆர்சிடிசியின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பொங்கல் 50 கிராம் அளவு மட்டுமே இருந்தது.
பயணிகள்
அதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அதில் அந்த உணவை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ள நிலையில் அது எப்போது தயார் செய்யப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் குறிப்பிடவில்லை.
வீடியோ
இதுகுறித்து பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ள தகவலின்படி கூறுகையில், ரயிலில் பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல்
அந்த வகையில் கொரோனா தொற்று பரவலால் பாதுகாப்பு கருதி ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வைகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல் ஐஆர்சிடிசி மூலம் உணவு தயாரித்து பயணிகளுக்கு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ரயில்களில் உணவு பொருட்கள் தயாரிப்பது இல்லை.
சிப்ஸ்
பயணிகள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை தாங்களே கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஐஆர்சிடிசி மூலம் நடமாடும் உணவு பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலம்தான் பயணிகளுக்கு சிப்ஸ்,பிஸ்கெட், தண்ணீர், தேநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
உணவு நிறுவனம்
அதுதவிர ஐஆர்சிடிசி அனுமதி பெற்ற உணவு நிறுவனம் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுகிறது. அதன்படி 61 கிராம் பார்சல் செய்யப்பட்ட பொங்கல் வழங்கப்படுகிறது. மேலும் அந்த உணவு உட்கொள்ளும் முன் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு
அதன்படி பார்சல் செய்யப்பட்டு கொடுக்கபட்ட உணவில், சூடான நீரை ஊற்ற வேண்டும். பிறகு 8 நிமிடம் கழித்து பார்த்தால், 220 முதல் 230 கிராம் உணவாக கிடைக்கும். இந்த வழிமுறை பார்சல் செய்யப்பட்டுள்ள உணவின் மேல் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.