விசிட் அடித்த எலும்புக் கூடு.. வியப்பளித்த நாராயணப்பா.. சாமியே சரணம் அய்யப்போ.. கலகலத்த திமுக பேரணி
சென்னை: ஆயிரக்கணக்கான போலீசார், துப்பாக்கி பாதுகாப்பு.. ட்ரோன்கள் வீடியோக்களுக்கு குடியுரிமை சட்டத்துக்கு எதிரான திமுகவின் பேரணி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது! சில மணி நேரமே சென்னையில் நடந்த இந்த பேரணி ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமின்றி டெல்லியையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.. இந்த பேரணியின் சில ஹைலைட்ஸ்கள்தான் இவை:
- பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு வழியெல்லாம் இருந்தன.. துப்பாக்கி போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. கலவரம் ஏதாவது ஏற்பட்டால் கண்ணீர் புகை, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனங்கள் ஒரு பக்கம் நின்றிருந்தன.. அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டுவிடாமல் தடுக்க தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் இவைகளுக்கு கடைசிவரை கொஞ்சமும் வேலையே இல்லாமல் போனதுடன், நீதிமன்ற உத்தரவும் இறுதி வரை காப்பாற்றப்பட்டதுதான் பேரணியின் சக்சஸாக அமைந்தது!. கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் என அவர்களது தீவிரம் இந்த பேரணியில் அதிகமாகவே தென்பட்டது. ஆங்காங்கே ட்ரோன்கள் மூலம் பேரணி வீடியோ பதிவாகி கொண்டிருந்தது..
- விடிகாலையில் இருந்தே தாளமுத்து நடராசன் மாளிகை அருகே திமுக தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள். தொடர்ந்து கூட்டணி கட்சி தொண்டர்கள் என சாரை சாரையாக வர தொடங்கினர்.. அழைப்பு விடுக்கப்பட்ட 98 அமைப்புகளுடன் பிற அமைப்புகளும் ஒன்று கலந்தன. திமுக தலைவர் ஸ்டாலின் வந்தவுடனேயே பேரணி ஆரம்பித்துவிட்டது.
- பேரணி துவங்குவதற்கு முன்பேயே பேரணியில் பங்கேற்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ் பாரதி எம்பி., சைதை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அவ்வப்போது தொண்டர்களுக்கு அட்வைஸ் தந்துகொண்டே இருந்தனர்.. பேரணியில் முழு கவனம் செலுத்தி கண்காணித்து கொண்டே இருந்ததுடன், மைக்கை பிடித்து அறிவுரைகளை இருவரும் தந்தபடியே இருந்தனர்.
- ஆயிரமாயிரம் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் திரண்டு பின்னால் வர.. பேரணியின் முன்னால் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கையில் பதாகைகளுடன் நடந்துவந்தனர். ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை அடைய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. தலைவர்களை வரவேற்று மேடை அருகே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமரவைத்துக் கொண்டிருந்தார் சேகர்பாபு.
- "இந்தியாவின் இறையாண்மையை காவிக் கொடியால் மறைக்காதே", "உரிமை கொடு உரிமை கொடு ஒட்டுமொத்த அகதிக்கெல்லாம் இந்தியர் என்ற உரிமைகொடு", "மாற்றாதே மாற்றாதே.. இந்திய நாடு சமத்துவ நாடு இந்து நாடாய் மாற்றாதே", "வேண்டும் வேண்டும் சட்டம் வேண்டும் அனைவருக்கும் பொதுவான குடியுரிமை சட்டம் வேண்டும்", "மத்திய அரசின் துரோகத்துக்கு எடப்பாடியே துணை போகாதே" என்ற முழக்கங்கள்தான் இந்த பேரணியின் சாராம்சமாக விளங்கியது. இந்த வாசகங்களை தலைவர்கள் சொல்லும்போது, தங்களுடைய வலதுகையை உயர்த்தி உயர்த்தி ஆவேசமாக முழக்கமிட்டனர்!
- இந்த பேரணியில் திடீரென ஒரு எலும்புகூடு நுழைந்துவிட்டது.. ஒரு செகண்ட் எல்லாருமே உற்று பார்த்தபோதுதான், கருப்பு, வெள்ளை கலரில் உடம்பில் எலும்புக்கூடு போல வரைந்து வைத்திருந்தார்.. தலையில் "சட்ட மசோதாவை திரும்ப பெறு" என்ற வாசகம் பளிச்சென தெரிந்தது.. திமுக தொண்டரின் இந்த எலும்புகூடு கெட்-அப்பினை அனைவருமே பார்த்துகொண்டே நகர்ந்தனர்.
- பேரணி என்றாலே சுறுசுறுப்பு மிகுந்த இளைஞர் கூட்டம்தான் இருக்குமா என்ன? 85 வயது தாத்தா இந்த பேரணியில் கலந்து கொண்டு அசத்தினார்.. ஓசூரை சேர்ந்த நாராயணப்பா என்பது இவர் பெயர்.. "திமுகவுக்குதான் என்னுடைய உயிர்.. கருணாநிதி இல்லாவிட்டால் என்ன.. தளபதி ஸ்டாலின் இருக்கிறாரே. இருவரும் ஒருவர்தான் எனக்கு" என்று சொன்ன இவரது பேச்சு சுற்றியிருந்தவர்களுக்கு புதுவித உத்வேகத்தை தந்தது.
- திமுக பேரணியில், கருப்பு, காவி வேட்டி என ஐயப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர். காவி வேட்டியுடன் ஒருவர் முக ஸ்டாலினின் போட்டோ அடங்கிய பதாகை ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு முழக்கமிட்டு சென்றது அனைவரையும் ஈர்த்தது மட்டுமின்றி சாதி, சமயங்களையும் தாண்டிய பெருமையை இந்த பேரணி ஏற்படுத்தியது.
- இன்று சென்னையில் திரண்டு வந்த கூட்டத்தை கண்டால், திமுக அதன் பலத்தை கொஞ்சமும் இழக்கவில்லை என்பதுடன், அதன் வலிமை மேலும் கூடியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.. அத்துடன், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதன் அழுத்தமும் மேலும் அதிகமாகி உள்ளது என்பது இன்று டெல்லிக்கு மேலும் ஆணித்தரமாகவே உணர்த்தப்பட்டுள்ளது.
Comments
English summary
highlights of Anti CAA protest DMK and alliance parties rally in Chennai