இந்தியை தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளதாம்.. சொல்வது சுஷ்மா.. அதுவும் சென்னையில்
Recommended Video
சென்னை: இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
தட்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவின் 82- வது பட்டமளிப்பு விழா சென்னை தி.நகரில் நடந்தது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: 1915-இல் காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த போது இந்தியாவின் அடிமை தன்மையை போக்க தேசிய மொழி அவசியம் என கருதினார். மொழி என்பது மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரம். மொழி என்பது நாகரீகம், கலாச்சாரமாகவும் விளங்குகிறது.
லோக்சபாவுக்கு பல கட்ட தேர்தலா?.. சென்னை வந்த சுஷ்மா சுவராஜ் சூசக தகவல்!
இந்தி கற்க வேண்டும்
மொழி வளர்ச்சியில் தேச வளர்ச்சி இருக்கிறது. இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளது. 1918 - யில் இந்தூரில் நடந்த இந்துசாஹித் சம்மேளனத்தின் ஆண்டு மாநாட்டில் தென்னிந்திய மக்கள் இந்தி கற்க வேண்டும் என்ற கோரிக்கையை மகாத்மா காந்தி வைத்தார்.
இந்தி பிரச்சார சபா
இதன் தொடர்ச்சியாக தன் மகன் தேவதாஸ் காந்தியை அவர் மதராஸுக்கு அனுப்பினார். 1917ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் தலைமையில் சென்னையில் இந்தி பிரச்சார சபா தொடங்கப்பட்டது. இந்தி பிரச்சார சபாவிற்காக உழைத்த தியாகிகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சாரத்தால் தான் சபா வளர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளையும் இந்தி பிரச்சார சபா கற்றுத் தருகிறது.
பிரதமர் மோடி பேச்சு
முதலில் நடக்கும் பிராந்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மாணவர்கள் இந்தி கற்று பட்டம் பெற முடியும். அரசாளும் மொழியாக இந்தி உள்ளது. 2014 - யில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி இந்தியில் பேசினார். இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் உடனும் வெளிநாடு செல்லும் போது சந்திக்கும் வெளிநாட்டு தலைவர்கள் உடனும் மோடி இந்தி மொழியிலேயே பேசுகிறார்.
இந்தி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
இதன் காரணமாக இந்தி மொழியை தங்கள் நாட்டிலும் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்தி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட இந்தியின் தாக்கத்தால் அந்த நிலை தற்போது மாறி உள்ளது.
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மற்றும் மாநில மொழிகளில் ஊடகங்கள் பெருகி உள்ளன. விளம்பர துறையில் இந்தி மற்றும் வட்டார மொழி கற்றவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சமூக ஊடகங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் இந்தி மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.