''தமிழை தப்பு இல்லாமல் எனக்கு எழுத தெரியாது".. பரபரப்பு பேச்சால் அதிர வைத்த திமுக எம்பி!
தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது என்று எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை: ''தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது" என்று திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து சோஷியல் மீடியாவில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பை நோக்கமாகக் கொண்டது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
"ஹிந்தி படிச்சால்தான் இந்தியனா இருக்கனும்னா அந்த ஹிந்தியே எங்களுக்கு தேவையில்லை" என்று சோஷியல் மீடியாவில் ஆவேச கருத்துக்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. அதேபோல, கடந்த சில மாதங்களாகவே மும்மொழிக் கொள்கை, மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக மிக தீவிரமாக எடுத்து வருகிறது.
எம்பி கனிமொழி ஏர்போர்ட் விவகாரத்துக்கு பிறகு இதுமேலும் தீவிரமானது.. இதனால் பாஜக தரப்பு எரிச்சல் அடைந்தது.. எல்.முருகன் முதல் எஸ்வி சேகர் வரை, திமுக இதை அரசியலாக்குவதாக குற்றஞ்சாட்டியது.. தேர்தல் நேரத்தில் இப்படியெல்லாம் சொல்லி திசை திருப்ப முயல்வதாகவும் தெரிவித்து வருகிறது.
அதேபோல, பாஜகவின் துணை தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அண்ணாமலையும் திமுகவுக்கு எதிரன விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இதற்கு தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பதிலடி தந்தார்.. தனது ட்விட்டர் பக்கத்திலும் கருத்து மோதலில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்.. இவர்களுக்கு இடையான விவாத சவால் உரையாடலும் நடைபெற்றது.
இதனிடையே, திமுகவுக்கு செந்தில்குமாருக்கு தமிழ் எழுத படிக்க வராது என்ற ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.. இந்நிலையில், ஒரு நாளிதழுக்கு டாக்டர் செந்தில்குமார் அளித்துள்ள பேட்டியில், சொல்லி உள்ளதாவது:
"நான், ஏற்காடு மான்போர்டு பள்ளியில் துவக்க கல்வி முதல், மேல்நிலை கல்வி வரை படித்தேன்... 5-ம் வகுப்பு வரை மட்டுமே, விருப்ப பாடமாக தமிழ் படித்தேன்.. தொடர்ந்து, பிரெஞ்ச் பாடத்தை எடுத்து படித்தேன். அதே நேரத்தில், இந்தியை முழுமையாக எழுத, படிக்க, பேச எனக்கு தெரியாது.
ஆனால், தமிழில் பேசும்போது, பிழையின்றி உச்சரிக்க முடியும்... துவக்க கல்வி முதல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் பள்ளி, கல்லுாரிகளில் படித்ததால், தமிழை எனக்கு முழுமையாக தப்பில்லாமல் எழுத தெரியாது" என்று தன் பேட்டியில் சொல்லி உள்ளாராம். இதையடுத்து அதிமுகவினர், ‛மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ், தமிழ் என்று பேசிவரும் திமுக, தமிழை எழுத தெரியாத ஒருவரை எம்பி ஆக்கியிருக்கிறது" என்று விமர்சித்து வருகிறது.
ஆனால், "திமுக எம்பி உண்மையை சொல்லி உள்ளார்.. எதையும் மறைக்கவில்லை.. ஒளிவு மறைவு இலலாமல் அவர் படித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.. தமிழ் பிழையில்லாமல் எழுதவே தெரியாது என்றுதான் சொன்னாரே தவிர, தமிழே எழுத தெரியாது, பேச தெரியாது என்று அவர் சொல்லவில்லை.. முக்கியமாக அவருக்கு இந்தி தெரியாது என்றும் சொல்லி உள்ளார்.. இதையும் கவனிக்க வேண்டும்" என்று திமுக தரப்பு பாராட்டி வருகின்றனர்.