ஆயுஷ் செயலாளரின் ஹிந்தி திணிப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.. மத்திய அமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்
சென்னை: ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக தமிழகத்தை சேர்ந்த இயற்கை மருத்துவர்களை ஆன்லைன் கருத்தரங்கில் இருந்து வெளியேறுமாறு ஆயுஷ் அமைச்சக செயலாளர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத நாயக்கிற்கு கரூர் லோக்சபா எம்பி ஜோதிமணி (காங்கிரஸ்) கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான 'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில், இந்தியில் மட்டும் பயிற்சியை நடத்தியுள்ளனர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த இயற்கைவழி மருத்துவர்களை, ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் அச்சுறுத்தியதாகவும், வெளியேறிவிடுங்கள் என கோபத்தோடு கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு தமிழகத்தின் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மத்திய அமைச்சருக்கு ஜோதிமணி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரிலேயே பல்வேறு வகையான மருத்துவ முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை காட்டக்கூடிய ஒரு துறையில் இந்தி தெரியவில்லை என்பதற்காக தமிழகத்தை சேர்ந்த நேச்சுரோபதி மருத்துவர்களை ஆன்லைன் கருத்தரங்கில் இருந்து வெளியேறும்படி உங்கள் துறைச் செயலாளர் கூறியது துரதிர்ஷ்டவசமானது.
ஆயுஷ் செயலாளரின் இந்தி மொழி வெறி...மிரட்டல் விடுக்கும் அட்டூழியம்...முக ஸ்டாலின் கண்டனம்!!
இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு மொழிக்கும் தமிழகம் எதிரி கிடையாது. ஆனால் வலிந்து திணிப்பதை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் நடவடிக்கை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது.
கொரோனா வைரஸ் போன்ற இடர் பாட்டில் இருந்து காத்துக் கொள்வது தொடர்பாக ஆலோசிக்க, கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது வருத்தமளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டதோ, அதைவிடுத்து மொழியை முன்னிலைப்படுத்துவதில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் முனைப்பு காட்டி உள்ளார்.
நாடாளுமன்றத்தின் உறுப்பினர் என்ற வகையில் நாட்டின் பொது நலனை கருத்தில் கொள்ளாமல் ஆயுஷ் அமைச்சகம் வேறு எதற்கும் முன்னுரிமை கொடுப்பது சரியல்ல என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் அமைச்சகத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
நாட்டின்வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு துரோகம் விளைவிப்பதை போல ஆயுஷ் அமைச்சக செயலாளர் நடவடிக்கை இருந்துள்ளது. எனவே உங்கள் அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் மறுபடியும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது உங்கள் கடமை. இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.