இந்தி தெரியாது போடா.. பல லட்சம் டி-ஷர்ட்.. வெளிநாட்டிலிருந்து கூட குவியும் ஆர்டர்.. திருப்பூரில் செம
சென்னை: தமிழகத்தில் தற்போது இந்தி திணிப்பிற்கு எதிரான டி ஷர்ட் புதிய பிஸ்னஸ் மாடலாக உருவெடுத்துள்ளது. லாக்டவுன் காரணமாக சரிந்து இருந்த துணி உற்பத்தி இந்த பிரச்சாரம் காரணமாக புதிய எழுச்சி பெற்றுள்ளது.
பொதுவாக ஒரு போரோ, உலகம் முழுக்க ஏதாவது பெரிய பாதிப்போ, மோதலோ ஏற்பட்டால் அந்த மோதலுக்கு இடையே சில நிறுவனங்கள் பயன் அடையும். அந்த மோதலில் கூட சில நிறுவனங்கள் காசு பார்க்கும். இரண்டாம் உலக போரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வளர்ந்தது போல...
உலகம் முழுக்க கொரோனா பாதிப்பிற்கு இடையிலும்,பொருளாதார சரிவிற்கு இடையிலும் அமேசான் ஜெப் பெஸோஸ், ஜியோ முகேஷ் அம்பானி என்று பலரும் தங்கள் சொத்து மதிப்புகளை பெருக்குவது இப்படித்தான். இன்னல்களை வைத்து லாபம் பார்ப்பது ஒருவகையான கார்ப்பரேட் யுக்திதான்.
பாலைவனத்தை குறி வைத்து.. சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்.. சீனா நடத்திய "லைவ் - போர் பயிற்சி".. ஷாக்கிங்!
இந்தி எதிர்ப்பு
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் புதிய பிஸ்னஸ் மாடலாக மாறியுள்ளது. ஆம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் மீண்டும் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திக்கு எதிராக கடந்த இரண்டு மாதமாக தீவிரமாக பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தி தெரியாத காரணத்தால் திமுக எம்பி கனிமொழியை பார்த்து சென்னை விமான நிலைய அதிகாரி கோபமாக பேசியதில் தொடங்கியது இந்த பிரச்சனை.
மும்மொழி திட்டம்
கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று அந்த அதிகாரி கேட்டது பெரிய சர்ச்சையானது. அதன்பின் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பிற்கு எதிரான கோஷங்கள் எழ தொடங்கியது. தமிழகம் முழுக்க மும்மொழி கொள்கைக்கு எதிராக பிரச்சாரங்கள் தொடங்கியது. அப்போதுதான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அந்த டி ஷர்ட் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்திக்கு எதிரான பிரச்சாரத்தை இந்த டி ஷர்ட் புதிய தளத்திற்கு கொண்டு சென்றது.
யுவன் சங்கர் ராஜா
இணையத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் யுவன் அணிந்து இருந்த டீ சர்ட்தான் தற்போது வைரலாகி உள்ளது. அதில், நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் "ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து இந்தி தெரியாது போடா என்று டி ஷர்ட் போட்டு பலர் இணையத்தில் புகைப்படம் வெளியிட்டனர்.
பலர் புகைப்படம்
நடிகர் சாந்தனு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் பலர், வரிசையாக திரையுலக பிரபலங்கள் பலர் இந்த டி ஷர்ட் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டனர். இதனால் டிவிட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் #இந்தி_தெரியாது_போடா என்ற டேக் டிரெண்ட் ஆனது . இந்திக்கு எதிராக மக்கள் இதில் குரல் எழுப்பி வந்தனர்.
மக்கள் பலர்
தமிழகம் முழுக்க மக்கள் பலர் இந்த டி ஷர்ட்டை அணிந்து இந்திக்கு எதிரான தங்கள் குரலை வெளிப்படுத்தினர். ஒரு கட்சி பிரச்சாரம், பிரபலங்கள் பிரச்சாரம் என்று இல்லாமல், தமிழகம் முழுக்க மக்கள் எதிர்ப்பாக இது உருவெடுத்தது. இதனால் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் இந்த டி ஷர்ட் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த டி ஷர்ட்டை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஆர்வம் காட்டி வருகிறார்கள்
இதனால் தற்போது திருப்பூரில் இந்த இந்தி தெரியாது போடா டி ஷர்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் ஆர்டர் வருகிறது என்று திருப்பூர் உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.லாக்டவுன் நேரத்தில் துணி விற்பனை இல்லை, உற்பத்தியும் இல்லை. இந்த முறை பள்ளி சீருடை உற்பத்தியும் இல்லை. ஆனால் திடீரென இந்த டி ஷர்ட் காரணமாக எங்களுக்கு நிறைய ஆர்டர் வருகிறது என்று உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இதை எதிர்பார்க்கவில்லை
இப்படி அதிக அளவில் ஆர்டர் வரும் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று திருப்பூர் டி ஷர்ட் உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். அதோடு வெளிநாடுகளில் இருந்தும் மொத்தமாக பலர் டி ஷர்ட் கேட்கிறார்கள். பல பிரபலங்கள் மொத்த மொத்தமாக டி ஷர்ட் கேட்டு ஆர்டர் செய்துள்ளனர். மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்தோம். இப்போது இந்த டி ஷர்ட் காரணமாக மீண்டு வந்து இருக்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
பல லட்சம் ஆர்டர்
தமிழகத்தின் பல மூலையில் இருந்து ஆர்டர் வந்து இருப்பதாக இவர்கள் கூறியுள்ளனர். பல லட்சம் பேர் இதுவரை ஆர்டர் செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த டி ஷர்ட் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக இந்த டி ஷர்ட் அப்பகுதி மக்களுக்கு வருவாயை கொடுத்துள்ளது. இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் அரசியல், மக்கள் புரட்சி என்பதை எல்லாம் தாண்டி இது திருப்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு கொடுக்க தொடங்கி உள்ளது.