பொன்.மாணிக்கவேல் பொய் வழக்கு போடுகிறார்.. இந்து அறநிலையத்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார்!
பொன்.மாணிக்கவேல் பலர் மீது பொய் வழக்கு போடுகிறார் என்று இந்து அறநிலையத்துறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறது.
சென்னை: பொன்.மாணிக்கவேல் பலர் மீது பொய் வழக்கு போடுகிறார் என்று இந்து அறநிலையத்துறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறது.
தற்போது தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது போலீசார் அடுக்கடுக்காக புகார் அளித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அதன்பின் 4 அதிகாரிகள் அவர் மீது புகார் அளித்தனர். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறையும் மாணிக்கவேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளது.
பொன்.மாணிக்கவேல் மீது இந்து அறநிலையத்துறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்துள்ளார்.
இதற்கு பின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில், இதுவரை 10 அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்.மாணிக்கவேலால் இந்து அறநிலையத்துறையே முடக்கப்படும் அபாயம் உள்ளது.
பொன்.மாணிக்கவேல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிலைகடத்தல் தொடர்பான எந்த வழக்கிலும் அவர் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அவர் பதிவு செய்த வழக்குகளில் எந்த உண்மையும் இல்லை. கோயில்களில் உள்ள அறங்காவலர்களே சிலைகளுக்கு பொறுப்பு என்பதை அவர் உணர வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.