அப்படி மட்டும் நடந்திருந்தால்.. அறநிலையத்துறை கடும் விளைவுகளை சந்திக்கும்.. ஹைகோர்ட் எச்சரிக்கை
சென்னை: மயிலாப்பூர் கோவில் சிலைகளுக்கான ஆவணங்கள் அழிக்கப்பட்டிருந்தால், அறநிலையத்துறை, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், என்று, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலைகள் மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஹைகோர்ட் இதுபோன்ற காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது.
சென்னையில் புகழ்பெற்ற, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவன நாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை காணாமல் போனது. தேவார பாடல் பெற்ற இந்த தலத்தில், தல புராணத்தோடு தொடர்புடைய சிலை மாற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மயிலின் வாயில் பூ வைத்திருப்பதை போன்ற சிலை மாற்றப்பட்டு, அதற்கு பதில் மயில் வாயில் பாம்பு இருப்பதை போன்ற சிலை இருப்பது தெரியவந்திருந்தது.
[மொழி வழி மாநிலமாக பிரிந்த பின் உயர்ந்துள்ளதா தமிழகம்? ]
ஹைகோர்ட்டில் வழக்கு
அதனால் அங்கு புதிய சிலையை நிறுவி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆர்.மகாதேவன், ஏ.டி.ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆவணங்கள் அழிந்துவிட்டன
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டன என்று தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கடும் எச்சரிக்கை
அரசு கூறும் காரணம் உண்மையாக இருந்தால், அதற்கு கடும் விளைவுகளை இந்து சமய அறநிலைத்துறை சந்திக்கநேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதனால் இந்து சமய அறநிலையத்துறை நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மனு விவரம்
2014 ஆம் ஆண்டு கபாலீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் என்ற பெயரில் பல பணிகள் நடைபெற்றது. அப்போதுதான் மயில் வாயில் பூ வைத்திருந்த, சிலையை மாற்றி விட்டு, மயில் வாயில் பாம்பு இருப்பது போன்று சிலை மாற்றப்பட்டுள்ளது. அங்கே பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு இது தெரியும். அவர்களும் அரசு கவனத்தில் கொண்டு வரவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணையுடன் சிலை மாற்றப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டிலிருந்து சிலை மாற்றப்பட்டது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு ரங்கராஜன் நரசிம்மன் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை பொறுப்பு
ஒரு சிலை செய்யப்பட்டு கோயிலுக்கு ஒப்படைக்கும்போது, அரசுடைய பொறுப்பு முடிவடைந்து விடும். அதன் பிறகு இந்து சமய அறநிலையத்துறை தான் இதற்கு பொறுப்பு. சிலைகளை பராமரிப்பதும், சிலைகளின் மதிப்பு எவ்வளவு, எடை எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்து சமய அறநிலையத்துறைதான் பராமரிக்கும்.