2001 வெற்றியை விட.. இது எக்ஸ்ட்ரா தித்திப்பு.. இளம் இந்தியன் டீம் அதகளம்.. அடங்கிய ஆஸ்திரேலியா!
சென்னை: 2001ஆம் ஆண்டு கொல்கத்தா டெஸ்ட் போட்டியை இந்தியர்கள் மட்டுமல்ல.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள்.
Recommended Video
ஸ்டீவ் வாக் தலைமையில், தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளை வென்று அசைக்க முடியாத அணியாக இந்திய மண்ணுக்கு வந்திருந்தது ஆஸ்திரேலியா. இந்தியாவிலும் மும்பையில் ஈஸியாக முதல் போட்டியை வென்று '16 வெற்றிகள்'என்று மார் தட்டியது.
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, 2வது டெஸ்ட் நடந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்தனர் ஆஸி. வீரர்கள். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து கொக்கரித்தது.
மறக்க முடியாத கொல்கத்தா டெஸ்ட்
முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. இந்தியாவை 171 ரன்களில் சுருட்டியது. பாலோ ஆன் பெற்று ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. அவ்வளவுதான், இதிலும் தோல்விதான் என நினைத்தனர் கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால் விஸ்வரூபம் எடுத்தனர் விவிஎஸ் லட்சுமணன் மற்றும் ராகுல் டிராவிட். இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்று பாடம் எடுத்தனர். லட்சுமணன் 281, ராகுல் டிராவிட் 180 ரன்கள் குவித்தனர். இருவரும், நங்கூரம் போட்டு ஆடிய ஆட்டத்தால் ஆடிப்போனது ஆஸ்திரேலியா.
வரலாற்று வெற்றி
அடுத்து பந்து வீச்சிலும் இந்தியா கலக்க, 212 ரன்களில் சுருண்டு ஆஸ்திரேலியா தோற்றது. பாலோ ஆன் பெற்று, 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற அந்த வெற்றி, வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சந்தித்த மிக அதிர்ச்சிகரமான தோல்விகளில் ஒன்றை இந்தியா பரிசாக கொடுத்தது.
பெரிய வெற்றி
இதன்பிறகு சுமார் 20 வருடங்களுக்கு பிறகு, அதேபோன்ற ஒரு அதிர்ச்சியை ஆஸி.க்கு கொடுத்துள்ளது இந்தியா. இன்னும் சொல்லப்போனால் அதைவிட பெரிய சம்மட்டி அடி கொடுத்துள்ளது. ஏனெனில் இப்போது, ஆஸ்திரேலியாவில் அதன் மண்ணில் வைத்தே, வெட்டி சாய்த்துள்ளது டீம் இந்தியா. டெஸ்ட் போட்டிகளுக்கென்றே அளவெடுத்து செய்யப்பட்டவர் போன்ற ஸ்டீபன் ஸ்மித் , அதிரடி வீரர் டேவிட் வார்னர், கிரிக்கெட் உலகின் முன்னணி பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன், அடுத்த மெக்ராத் என்று வர்ணிக்கப்படும் ஹசில்வுட் ஆகியோருக்கு எதிராக ஒரு இளம் இந்திய அணி வெற்றி வாகை சூடி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
அசால்டாக நினைத்த ஆஸ்திரேலியா
விராட் கோலி தாயகம் திரும்பி விட்ட நிலையிலும், இந்திய அணி விஸ்வரூபம் எடுத்துள்ளதை ஆஸி. ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய ரசிகர்களில் பலரே கூட எதிர்பார்க்கவில்லை. இதே தொடரில் தான், அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. அந்த ஆட்டத்தை பார்த்து, இவர்களை எளிதாக வென்று விடலாம் என்று அசால்டாக நினைத்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால் இந்திய அணியின் இளம் காளைகள், ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வந்து, முட்டி தூக்கி எறிந்து விட்டனர்.
அடுத்தடுத்து அசத்தல்
சிட்னியில் தோற்கவிருந்த 3வது டெஸ்ட் போட்டியை, ரிஷப் பந்த், அஸ்வின், ஹனுமான் விஹாரியின் மன உறுதியால், டிரா செய்து ஆஸ்திரேலியாவின் முகத்தில் கரி பூசிய கையோடு, பிரிஸ்பன் மைதானத்தில் நாங்கள் தோற்றதே இல்லை என்ற இறுமாப்புடன் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அதிர்ச்சி தோல்வியை பரிசாக கொடுத்துள்ளது இந்தியா.
இளம் காளைகள்
முதல் இன்னிங்சில் 21 வயதாகும் வாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார் . இரண்டாவது இன்னிங்சிலும் இளம் வீரர்கள் ரிஷப் பந்த், சுபம் கில், கலக்கிவிட்டனர். மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 20 ரன்களை விளாசினார் சுபம் என்றால் இவர்கள் பயமறியாத கன்றுக்குட்டிகள்தானே.
எக்ஸ்ட்ரா இனிப்பு
விராட்கோலி கிடையாது. முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் கிடையாது. இத்தனை, இல்லை.. இல்லைகளுக்கு மத்தியில், பாதி பலம் கொண்ட இந்திய அணி என்று வர்ணிக்கப்பட்ட ஒரு அணியிடம் ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் தோற்று வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லட்சுமணன், ஜாகீர் கான், வெங்கடேச பிரசாத், ஹர்பஜன் சிங் போன்ற ஜாம்பவான்கள் இருந்த அணி பெற்ற 2001 வெற்றியை விடவும், இந்த இளம் படை பெற்ற வெற்றி, இன்னும் எக்ஸ்ட்ரா தித்திப்போடு இருக்கிறது.
இளம் அணி
இளைஞர்களுக்கு திறமை இருக்கிறது, வாய்ப்பு மட்டும் கிடைத்தால் போதும், நாங்கள் யார் என்பதை காட்டி விடுவோம் என்பதை வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் நிரூபித்துள்ளனர். சீனியர் ஆட்டக்காரர்களான புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா போன்றவர்களை விடவும் இந்த தொடரில் போட்டியை மொத்தமாக மாற்றக்கூடிய முக்கிய தருணங்களில் அணிக்கு தோள்கொடுத்து நின்றது இவர்கள்தான். எதிர்கால இந்திய அணி பாதுகாப்பான கைகளில் பத்திரமாக இருக்கிறது என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெளிவாக தெரிகிறது. இந்த மிகப்பெரிய வரலாற்று வெற்றியுடன் இளைஞர்களின் அசத்தல் ஆட்டத்தின் மீதான நம்பிக்கையுடன் இனிதாக பிறந்துள்ளது 2021.