தீயில் எரிய இருந்த திருக்குறள் ஓலைச்சுவடியை ஆங்கிலேயரிடம் பதிப்பிக்க ஒப்படைத்த'கோவை கந்தப்பன்'
சென்னை: தம்மிடம் தீயில் எரிக்க கொடுத்த ஓலைச்சுவடிகள் பழுதடையாமல் இருந்ததால் ஆங்கிலேயரிடம் பதிப்பிக்க சமையல்காரர் கந்தப்பன் கொடுத்தார்; அந்த ஓலைச்சுவடிகள்தான் திருக்குறள் என்று புலவர் செந்தலை கவுதமன் கூறியுள்ளார். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் கோவையில் திராவிட சிறகுகள் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் புலவர் செந்தலை கவுதமன் பேசிய வீடியோ தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் புலவர் செந்தலை கவுதமன் பேசியதாவது:
சென்னை மாகாண ஆட்சியராக இருந்தவர் எல்லீஸ். அவரது பெயரில் மதுரையில் இன்றும் நகர் இருக்கிறது. சென்னையில் வீதி இருக்கிறது. அவர்தான் சமஸ்கிருதத்தால் கறைபடியாத ஒரு மொழி தமிழ் என்று உலகுக்கு சொன்னார்.
அந்த தமிழை கொண்டு 40-க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கிறது என்றார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக ஹாரிங்டன் இருந்தார்.
அவரிடம் சமையல் பணி செய்தவர் கந்தப்பன். கந்தப்பனிடம் தீயில் எரிப்பதற்காக ஏராளமான ஓலைச்சுவடிகள் இருந்தன. இந்த ஓலைச்சுவடிகளில் சில பழுதடையாமல் இருந்தன. அவற்றை ஹாரிங்டனிடம் ஒப்படைத்தார் கந்தப்பன். அதன் மூலமாக எல்லீஸுக்கு அந்த ஓலைச்சுவடிகள் சென்றடைந்தன.
அந்த ஓலைச்சுவடிகள்தான் திருக்குறள். அந்த ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த கந்தப்பன், கோவை கிணத்துடக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர். அவர்தான் தமிழன் என்ற அரசியல் சொல்லை முதன் முதலில் கொடுத்த அயோத்திதாச பண்டிதரின் பாட்டன்.
காஷ்மீரை தொடர்ந்து நாகாலாந்து பிரச்சனைக்கும் சுமூக தீர்வை உருவாக்கும் மத்திய அரசு!
அதுதான் முதன் முதலில் அச்சேறிய திருக்குறள் நூல். அந்த நூல் வெளியான ஆண்டு 1812-ம் ஆண்டு. இவ்வாறு புலவர் செந்தலை கவுதமன் பேசினார்.