ஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: தேர்தல் பணிக்காக தெலுங்கானா சென்று வந்த ஊர் காவலர்களுக்கு சரியான ஊதியம் வழங்கவில்லை என்று 500க்கும் மேற்பட்ட ஊர்க் காவல் படையினர் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் வாசலில் போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பணிக்காக சென்னையில் இருந்து, 2,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணிக்காகச் சென்றனர். இன்று காலை அவர்கள் சென்னை திரும்பி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திரண்டிருந்தனர்.
அதில் ஒரு பிரிவினர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஒரு நாளைக்கு ரூ. 560 வீதம் , 5 நாளைக்கு 2800 ரூபாய் ஊதிய கணக்கில் , 80 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கி உள்ளதாகவும், இந்த 5 நாள் பணியில் எந்த உணவு, வசதியும் செய்து தரவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
1963 ல் இருந்து சமூகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் காவலாக வரும் ஹோம் கார்ட்ஸ் எனப்படும் ஊர்க் காவல்படையினர், தங்களுக்கு சரியான மதிப்பு வழங்கப்படாமல் கொத்தடிமைகளாக நடத்துவதாகவும்,
எப்பொழுதும் காலம் தாழ்த்தி ஊதியம் தருவதாகவும் குற்றம்சாற்றி வருகின்றனர்.
தங்களுக்கு பணி நிரந்தரம் செய்து கொடுக்க கோரியும், முறையான ஊதியம் வழங்க கோரியும் போராட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும் தெலுங்கானா போன்ற மற்ற மாநிலங்களில் ஊர்க் காவலர்களை பொது காவலர்களுக்கு இணையாக நடத்துவது போன்று , தங்களுக்கு மதிப்பு வழங்குமாறும் கேட்டனர். உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.