பிரஸ்மீட்டில் மீண்டும் பீலா ராஜேஷ்.. கொரோனா சிகிச்சைக்கு டபுள் மடங்கு படுக்கை வசதி- அதிரடி அறிவிப்பு
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பித்த காலகட்டங்களில், மாநிலத்தின் பாதிப்பு நிலவரம் பற்றி, தெரிவிக்க, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் சில காரணங்களால் திடீரென அவர் பிரஸ் மீட் செய்வதை நிறுத்தினார்.
அதற்கு பதிலாக தினசரி மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தி வந்தவர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். இவர் கூறும் விபரங்களை அறிந்து கொள்வதற்காகவே ஊடகத்தின் முன்பாக பொதுமக்கள் கூட்டம் கூடும்.
அந்த அளவுக்கு துல்லியமாகவும் நேர்த்தியாகவும் புள்ளி விவரங்களைக் கொடுத்து வந்தார் அவர். இந்த நிலையில் மீண்டும் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்க ஆரம்பித்தார்.
புதுச்சேரியில் இறந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு கொரோனா
மீண்டும் பீலா ராஜேஷ்
ஆனால் செய்தியாளர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியதால் செய்தியாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு வீடியோ மூலமாக பேட்டி அளிக்க ஆரம்பித்தார். பிறகு, அறிக்கை வாயிலாக விவரங்களை அளித்து வந்தது சுகாதாரத்துறை. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். ஆனால் இது பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தொடர்பான விளக்கமாகும். அவர் கூறியதை பாருங்கள்.
சென்னை மருத்துவமனைகளின் படுக்கை வசதி
சென்னையை பொறுத்த அளவில் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 13 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் கொரோனா நோய்க்கு எத்தனை படுக்கைகள் ஒதுக்கப்படுகிறது என்பதை கவனித்து அதை படிப்படியாக உயர்த்தி வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் இப்போதுள்ள நிலையில் 5 ஆயிரம் படுக்கை வசதி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை எண்ணிக்கை இதுவாகும். இது தவிர மற்ற உடல்நல பிரச்சனைகளுக்கும் படுக்கை வசதி உள்ளது.
படுக்கை வசதி அதிகரிப்பு
அரசு மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான படுக்கை வசதி எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த போகிறோம். முதலில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தோம். எனவே, கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கையை ஊடகங்களிடம் தெரிவிப்பது எளிதாக இருந்தது. இப்போது தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கின்றனர்.
கொரோனா உண்மையான பலி எண்ணிக்கை
எனவே, இப்போது அவர்களிடம் இருந்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பெற்று வருகிறோம். எண்ணிக்கையில் மாறுபாடு இருக்க கூடாது என்பதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கி உள்ளோம். அவர்கள் தனியார் மருத்துவமனைகளுடன் ஆலோசித்து, உரிய எண்ணிக்கையை பெறுவார்கள். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார். சென்னையில் பல மருத்துவமனைகளில் கொரோனா பலி எண்ணிக்கை அரசிடம் பதிவு செய்யப்படவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகளையடுத்து பீலா ராஜேஷ் இந்த விளக்கத்தை அளித்தார்.