ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானது... 21 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு இடைத் தேர்தல்?
சென்னை: பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூரையும் சேர்த்து தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மேலும், 21 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ண ரெட்டி. கள்ளச்சாராயத்திற்கு எதிராக கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் போது பேருந்தின் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவரது அமைச்சர் பதவியும், சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ் ஆகிய இருவரும் கடந்தாண்டில் மரணம் அடைந்ததால் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறித்து பேரவைத் தலைவர் ப.தனபால் நடவடிக்கை எடுத்தார்.
இந்தநிலையில், ஓசூர் சட்டமன்ற தொகுதியையும் சேர்ந்து மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளது. முன்னதாக, சட்ட மன்ற இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.