தென் மாவட்டங்களில் தொடர்ந்து பூக்கும் மாநகராட்சிகள்.. வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஓசூர், நாகர்கோயில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் மூலம்... மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு ஒரு பக்கம் இருந்தாலும்... தென் மாவட்டங்களில் தான் அதிகளவு மாநகராட்சிகள் உள்ளன என்று முணு முணுப்பும் எழ தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்குவது உள்ளாட்சி அமைப்புகள் தான்.... அடிப்படை கட்டமைப்பான உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வரக்கூடிய வருவாய் .. குறிப்பாக வரி வருவாய் தான்... உள்ளாட்சி அமைப்புகள் ஈட்டும் வருவாயில் தான் பெரும்பாலான கட்டமைப்புகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
மக்களிடமிருந்து வரி வசூலிக்கப்படுவது அவர்களுக்கான வசதிகளைச் செய்துகொடுக்கதான். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை என்பது 12 தற்போது ஓசூர், நாகர்கோயில் ஆகி நகராட்சிகளும் மாநகராட்சிகளாக மாறப்போகின்றன. அதற்கான சட்ட மசோதாக்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
புதுசு 14
அரசின் சட்ட மசோதாவை தொடர்ந்து... அதன் எண்ணிக்கை 14 ஆக உயர இருக்கிறது. அவற்றில் தென்மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு பார்த்தால்... மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. தற்போதைய நாகர்கோயிலையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 5 மாநகராட்சிகள்.
கிழக்கு மண்டலங்கள்
கொங்கு மண்டலத்தை எடுத்துக் கொண்டால்... கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய 4 மாநகராட்சிகள் உள்ளன. அதே நேரத்தில் மத்திய - கிழக்கு மாவட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகள் உள்ளன.
வடக்கு தேய்கிறதா?
வட மாவட்டங்களை .... அதாவது வடக்கு மண்டலத்தை எடுத்துக் கொண்டால்... அனைவரும் அறிந்த சென்னை ஒன்று தான் மாநகராட்சி பட்டியலில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக வேலூர் மாநகராட்சி. வடக்கில் தற்போது ஓசூரும் இணைகிறது.
மக்கள் கொதிப்பு
தென் மாவட்டங்களை எடுத்துக் கொண்டால்.. ஏற்கனவே 4 தற்போது நாகர்கோயிலையும் சேர்த்தால் 5. இந்த இடத்தில் வட மாவட்ட மக்களின் புலம்பல் வெளி வர ஆரம்பித்துள்ளது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பார்கள். ஆனால் மாநகராட்சிகளைப் பொறுத்தவரை வடக்கு தேய்கிறது, தெற்கு வாழ்கிறது என்ற முனுமுனுப்பு கிளம்பியுள்ளது.
8 மாநகராட்சிகள்
தமிழகத்தில் 1994ம் ஆண்டு அரை டஜனாக மட்டுமே இருந்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட இது இன்னொரு மடங்கு என்றே சொல்லலாம்... 25 ஆண்டுகளில் 8 மாநகராட்சிகள் உதயம் பெற்றிருக்கின்றன. அதிக வருவாய் என்ற அளவீட்டின் அடிப்படையில் (ஆனால்... தமிழகத்தின் மொத்த கடன் 5 லட்சம் கோடிகளை தாண்டி சென்று கொண்டிருப்பதை நீங்கள்... வசதியாக மறந்துவிட வேண்டும்)
நாகர்கோவில் நகராட்சி
அதிக மாநகராட்சிகள் பெற்ற தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதா என்று பார்த்தால் அதுதான் இல்லை. தமிழகத்தின் கடைக் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோயிலில் பிரதான தொழில். மீன்பிடித்தலும, அதனை சார்ந்த சந்தைப் படுத்துதலும் வளர்ச்சியின் முக்கிய ஆதாரங்கள். வேறு ஏதேனும்... குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார ரீதியாக வாழ்க்கை தரம் உயர்ததும் அளவுக்கு ஆலைகளோ... சென்னையில் பரந்து விரிந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோ இங்கு இல்லை.
வஞ்சிக்கப்படுகிறதா?
வட மாவட்ட பகுதிகளை எடுத்துக் கொண்டால்... வேலூரை தவிர வேறு எந்த நகரும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவில்லை. இந்த வேலூர் மாவட்டமும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி 10 ஆண்டுகள் தான் ஆகின்றன. வட மாவட்டங்களில் தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்துவதில் வஞ்சனை நிகழ்வதாக முணு முணுப்புகள் எழுந்து வருகின்றன.
வட மாவட்டங்களில் இரண்டு
வடக்கு மாவட்டமான வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆலைகள் பல உள்ளன. தொழில்வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எதிலுமே கணக்கில் கொள்ளாமல் தென் மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது எதனால் என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது ஆழமாக எழத் தொடங்கி உள்ளது.
நிறைவேறிய வாக்குறுதி
கிட்டத்தட்ட ஓசூரானது.. தமிழகத்துக்கு வருவதற்கான நுழைவு வாயில் என்றே சொல்லலாம். மக்களின் ஆதரவை அடிப்படையாக கொண்டு.. ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால்... லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே தான் ஓசூர் (இந்த தொகுதியின் பாலகிருஷ்ண ரெட்டியை நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல..) நாகர்கோவில் (அதிமுகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்த) மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
வாழ்வாதாரம்
வரிவருவாய் தான் கணக்கு என்பதை ஏற்றுக் கொண்டாலும்.. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினாலேயே வருவாய் தானாக உயரும். எனவே.. வடமாவட்டங்களிலும் வருவாயை தந்து கொண்டிருக்கிற... பல நகராட்சிகள்... மாநகராட்சிகளாக மாற்றப்பட வேண்டும்... என்பதே தற்போது அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.