கோயில் விழாக்களில் ஆடல், பாடல்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
Recommended Video
சென்னை: தமிழக கோயில் விழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் விழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில், அதிலும் குறிப்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில், ஆபாச நடனங்கள் இடம் பெறுவதாக புகார் எழுந்ததை அடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், கோயில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், இது தொடர்பாக மாநில டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்கவும், உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
வீடியோ பதிவில் ஆபாசம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறைக்கு அதி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி, வழக்கை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதன்மூலம் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இனி நடத்தப்படுமானால் அதை வீடியோவாக பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.