ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை.. இன்று சரணடைவாரா சரவணபவன் ராஜகோபால்?
Recommended Video
சென்னை: ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் இன்று சரணடைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெளிநாடுகளிலும் கிளை உள்ள தமிழகத்துக்கு ஹோட்டல்களில் ஒன்று சரவணபவன் ஆகும். இதன் உரிமையாளர் ராஜகோபால். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவருக்கு தனது உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். இவர் ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மென்மேலும் மேன்மை அடையலாம் என ஜோதிடர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்தார் ராஜகோபால். பின்னர் கடந்த 2001-ஆம் ஆண்டு கொடைக்கானலில் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டு ராஜகோபாலின் தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டார்.
இதை முதலில் ராஜகோபால் மறுத்த போதிலும் கடத்தியவர்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார். இதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 55 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். இதில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் அவர் ஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடையவும் கெடுவிதித்தது. இதனால் இன்று அவர் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.