சென்னை அருகே.. செல்போன் ஆலையில் 42 தொழிலாளர்களிடம் கொரோனா பரவியது எப்படி? பரபர தகவல்கள்
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள செல்போன் ஆலையில், ஊழியர்கள் சுமார் 42 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த ஆலை மூடப்பட்டது. இதற்கு பின்னணி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
செல்போன் ஆலையில், 42 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், மறு உத்தரவு வரும்வரை தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேபோல கார் உற்பத்தி ஆலையிலும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஏப்ரல்- மே என்னங்க.. ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.. எச்சரிக்கும் நிபுணர்
90 சதவீத ஊழியர்கள்
பெரும்பாலான தனியார் தொழிற்சாலைகள் 50 சதவிகித தொழிலாளர்களுடன் செயல்பட மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னர் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
பணிக்கு வராத, தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு கணக்கிடப்படும் என்று நிர்வாகம் கூறியதால் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலைகளுக்குள் செல்வோர் சானிட்டைசர் போட்டு கையை கழுவ வைக்கப்பட்டனர்.
காரணம்
செல்போன் ஆலைகளுக்குள் செல்வோர் காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்கிறது ஆலை நிர்வாகம். ஆனால், அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் பணியாற்ற அழைக்கப்பட்டது பிரச்சினைக்கு காரணம் என்கிறது அரசு வட்டாரங்கள்.
தொழிற்பேட்டைகள்
இந்த நிலையில்தான், கிண்டி உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன. கிண்டி தொழிற்பேட்டையில், 450 தொழிற்சாலைகள் உள்ளன. இவை சிறு, குறு நிறுவனங்கள். எனவே பணியாளர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இருப்பினும், நிறைய தொழிலாளிகள் அச்சத்தால், வேலைக்கு வரவில்லை என்கிறது கள நிலவரங்கள்.