சென்னை வந்த சீன கப்பல்.. கூண்டுக்குள் இருந்த பூனை.. அதிகாரிகள் அச்சம்.. பின்னணி மர்மம் என்ன?
Recommended Video
சென்னை: சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பல் கன்டெய்னரில் இருந்த ஒரு அழையா விருந்தாளி, நேற்று அதிகாரிகள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திவிட்டது.
ஆம்.. கண்டெய்னரின் ஒரு பகுதியில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு பூனை இருந்தது. அதுவும் சீனாவிலிருந்து வந்த கப்பல் என்பதால், அதிகாரிகள் அச்சப்பட்டு, விலங்கு நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பூனைக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதிக்கும் பணிகள் தொடங்கின. முதல்கட்ட சோதனையில் அப்படி எதுவும் இல்லை என தெரியவந்தது.
கோரோனா கோரத் தாண்டவம்.. சிகிச்சையளித்தவர்களையும் காவு கேட்கிறது.. வுஹான் மருத்துவமனை இயக்குநர் பலி
தனிமை
இருப்பினும் அந்த பூனை தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த பூனையை யார் ஏற்றினார்கள் என்ற விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அது தொடர்பான விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன. இதுதொடர்பாக துறைமுக அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் சிலர் கூறுகையில், வழக்கமாக இதுபோல ஏதாவது விலங்குகள் வரும். ஒருமுறை, உணவு பொட்டலங்கள் வந்த கண்டெய்னருக்குள், பாம்புகளை கூட பார்த்துள்ளோம். யதேர்ச்சையாக இப்படி எங்காவது ஏறி வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
விதிமுறை
விதிமுறைப்படி, உயிருடன் ஏதாவது விலங்குகள், கப்பலில் வரும்போது பிடிபட்டால், விலங்குகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டுமாம். 3 நாட்கள் அங்கே வைத்திருந்து, உரிமையாளர் யாரும் உரிமை கோராவிட்டால், அதை திருப்பியனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. பூனையை, திருப்பியனுப்பிவிட வேண்டும் என்றுதான், சுங்க அதிகாரிகள் விரும்புகிறார்களாம். எனவே, பூனை பிடிபட்ட தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்படுவதாகவும் சில தகவல்கள் சொல்கின்றன.
நடுவே ஏறியிருக்குமோ
மேலும் சில அதிகாரிகள் கூறுகையில், இது சீனாவிலிருந்த வந்த பூனையாக இருக்காது. 10 முதல் 20 நாட்கள் கடல் பயணத்தில், தண்ணீர் மற்றும் சாப்பாடு உண்ணாமல், அந்த பூனையால் எப்படி வந்திருக்க முடியும்? கப்பல் சென்னை வரும் வழியில், சிங்கப்பூர் அல்லது கொழும்பு போன்ற எங்காவது, இந்த பூனை ஏறியிருக்க கூடும் என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால், பூனை தொடர்பான மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.
கூண்டு
ஒருவேளை தவறுதலாக கப்பலில் ஏறியிருந்தால், பூனை எப்படி கூண்டுக்குள் அடைபட்ட நிலையில் இருந்தது என்ற சந்தேகமும் வராமல் இல்லை. அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பாக கருத்து கூறினால்தான், அந்த மர்மம் விலகும். அதுவரை, துறைமுக ஊழியர்களிடையே, சீனா கப்பலில் வந்த பூனை, பீதி குறையப்போவது இல்லை என்று மட்டும் தெரிகிறது.