வருமான வரி வழக்கிலிருந்து ரஜினிகாந்த் தப்பியது எப்படி? தடதடக்கும் பின்னணி இதுதான்!
Recommended Video
சென்னை: வருமான வரி, வழக்கிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் தப்பியது எப்படி என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாகச் செலுத்தவில்லை என கூறி, 2002 மற்றம் 2005 வரையிலான மூன்று நிதியாண்டுகளுக்கு சேர்த்து ரூ.66,22,436 அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில், 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்க மறந்த கேள்விகள்!
ரூ.1 கோடிக்கு கீழே
நீண்ட காலத்திற்கு பிறகு சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜினிகாந்த்துக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக கூறினார். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகைக்கு வழக்கு தொடருவதில்லை என்பதை சமீபத்தில் வருமான வரித்துறை எடுத்த கொள்கை முடிவு. இவ்வாறான வழக்குகளால் நிறைய வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்குவதால் வருமான வரித்துறை இப்படி ஒரு முடிவை எடுத்தது. ஆனால், உண்மையில், ரஜினிகாந்த்துக்கு எதிராக ரூ.1 கோடிக்கும் மேலாக வருமான வரித்துறை அபராதம் விதித்திருக்க வாய்ப்பு இருந்தும், அதை செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டம் என்ன சொல்கிறது?
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 271 (1) (சி) என்ன சொல்கிறது தெரியுமா? ஒருவர் தனது வருமானம் பற்றி தவறான விவரங்களை அளிப்பதன் மூலம் வரி செலுத்தாமல் தப்பிக்க முயன்றால், அவர் செலுத்த வேண்டிய வரித் தொகையில் 300% அபராதமாக விதிக்க முடியும். இது அதிகபட்ச அபராதம். அதேபோல, குறைந்தபட்சமாக வருமான வரித் தொகையில் 100% அபராதம் விதிக்க முடியும். ரஜினிகாந்த் விஷயத்தில், குறைந்தபட்ச அபராதத் தொகையை வருமான வரித்துறையினர் தேர்ந்தெடுத்து விதித்துள்ளனர். அதனால்தான், இப்போது, அவருக்கு எதிராக வழக்கு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
300 சதவீதம் போட்டிருந்தால்
வருமான வரித்துறை, ஒருவேளை, 300 சதவீத அபராதத்தை விதித்திருந்தால், அபராத தொகை 1.98 கோடி ரூபாய் என்ற அளவுக்கு சென்றிருக்கும். எனவே, வழக்கை அவர் எதிர்கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். 2002-03 மற்றும் 2004-05 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு இடையில் எந்தவொரு படத்திலும் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. எனவே, அவரது நடிப்புத் தொழிலில் இருந்து எந்த வருவாயையும் அவர் வருமான வரி தாக்கலின்போது காட்டவில்லை. அந்த மூன்று மதிப்பீட்டு ஆண்டுகளில், ஏற்கனவே முடிக்கப்பட்ட படங்களுக்காகவோ அல்லது எதிர்கால படங்களுக்காகவோ அவருக்கு எந்த ஊதியமும் கிடைக்கவில்லை.
வரி ஏய்ப்பு
அப்படியும்கூட, அந்த மூன்று ஆண்டுகளில் முறையே, ரூ.40.20 லட்சம், ரூ.39.51 லட்சம் மற்றும் ரூ.36.33 லட்சம் பணத்தை, தொழில்முறை செலவுகளுக்காக மேற்கொண்டதாக அவர் வருமான வரி தாக்கலின்போது கூறியிருந்தார். நடிகர் என்பதால் நடிக்காமல் இருக்கும் காலகட்டத்திலும், தனது பர்சனாலிட்டியை சீரமைத்துக்கொள்ள செலவிட தேவையுள்ளதால், இதை தொழில்முறை செலவீனம் என்றுதான் கருத வேண்டும் என்பது, ரஜினிகாந்த் தரப்பு கருத்தாக இருந்தது.
ஏற்க முடியாது
ஆனால், இந்த கருத்தை வருமான வரித்துறை ஏற்கவில்லை. சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஒரு வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அப்போது, தொழில்முறை செலவினங்களுக்காக எந்த வவுச்சர்களும் கிடைக்கவில்லை. எனவே ரஜினிகாந்த் அவ்வாறு கணக்கு காட்டியது பொய் என வருமான வரித்துறை முடிவுக்கு வந்தது. தனது தனிப்பட்ட செலவுகளை தொழில்முறை செலவாக அறிவித்திருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
தப்பியது இப்படித்தான்
இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்தார். அப்போது ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி ஆவணங்களில் குறிப்பிட்ட தொழில்முறை செலவீனத்திற்கான தொகையில் சுமார் 50 சதவீதத்தை குறைத்து காட்டினார். ஆனால், இந்த திருத்தம் இயல்பாக ரஜினிகாந்த்தால் மனமுவந்து நடக்கவில்லை. வருமான வரித்துறை, சோதனையில், தொழில்முறை செலவீனத்திற்கான வவுச்சர்கள் கண்டெடுக்கப்படவில்லை என்ற பிறகு, வேறு வழியின்றி திருத்திக் காண்பித்தது என்பதால், ரஜினிகாந்த் வேண்டுமென்றே வருமானத்தை மறைத்துவிட்டார் என்று, வருமான வரித்துறை முடிவுக்கு வந்து அபராதம் விதித்தது. ஆனால், 300 சதவீத அபராதத்தை தேர்ந்தெடுக்காமல் 100 சதவீத அபராதத்தை தேர்ந்தெடுத்ததால் ரஜினிகாந்த் வழக்கிலிருந்து தப்பியுள்ளார்.