Exclusive: மாமியாருக்கு 86 வயது.. அம்மாவுக்கு 76.. நான்தான் பாத்துக்கறேன்.. குஷ்பு பெருமிதம்
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வி.ஐ.பி.க்கள் வீட்டில் என்ன செய்வார்கள் அவர்களின் நேரம் எப்படி கழிகிறது என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.
அந்த வகையில் நடிகையும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு ஊரடங்கு காலத்தில் தனது நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார் என்பது பற்றி அறிவதற்காக அவரிடம் பேசினோம். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட தகவல் பின்வருமாறு;
'' எங்கள் வீட்டில் அனைத்து பணிகளையும் தற்போது நான் தான் செய்து வருகிறேன். எங்களுடன் தான் எனது மாமியாரும், எனது அம்மாவும் இருக்கிறார்கள். எனது மாமியாருக்கு 86 வயது, அம்மாவுக்கு 76 வயது. அவர்கள் இருவரையும் பார்த்துக்கொள்ளும் வேலை என்னுடையது. வேலையாட்கள் உட்பட யாரையும் இப்போது வீட்டிற்கு வரவேண்டாம் எனக் கூறிவிட்டேன். இதனால் இப்போது துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, சமைப்பது என எல்லா வேலைகளையும் நானே செய்து கொள்கிறேன்.
ஊரடங்கு காலம் என்றில்லை மற்ற பொதுவான நாட்களில் கூட சமைப்பதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு. ஷூட்டிங் செல்வதற்கு முன்னர் காலையோ அல்லது ஷூட்டிங் முடிந்து திரும்பிய பின்னர் மாலையோ சமைப்பது எனது வழக்கம் தான். மேலும், வீடு தூய்மையாக இருக்க வேண்டும் என நினைப்பவள் நான், இதனால் வேலையாட்களை எதிர்பார்க்காமல் அந்தப் பணிகளை எப்போதும் செய்வேன்.
பொதுவாகவே காலை 6 மணியில் இருந்து 6.30-க்குள் எழுந்துவிடுவேன். இரவு வரை வீட்டு வேலைகள் சரியாக இருப்பதால் நேரம் போவது தெரியவில்லை. தற்போது வெளியில் இருந்து எந்த உணவுகளையும் வாங்குவதில்லை, இதனால் எனது மகள்கள் விரும்பி கேட்கும் உணவு வகைகளை நானே செய்து கொடுப்பேன். பிள்ளைகள் எதை கேட்கிறார்களோ அதை சமைத்து தருகிறேன். அண்மையில் கூட பிரியாணி சமைத்து கொடுத்தேன்.
நாங்கள் மாடித்தோட்டம் அமைத்துள்ளதால் அதனை பராமரிக்க, தண்ணீர் விட, என மாலை நேரங்களை செலவிடுகிறேன். மாடித்தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு செடிகளும் என்னுடன் பேசுவதை போல் உணர்வேன். அதேபோல் வீட்டுவேலைகள் எல்லாம் முடித்த பின்னர் இரவில் படங்கள் பார்ப்போம். தமிழ் படம் என்றில்லை, மொழி தெரியாவிட்டாலும் கொரியன் உள்ளிட்ட எல்லா மொழி படங்களையும் பார்ப்போம்.
எனக்கு மதியத்தில் தூங்கும் பழக்கம் இல்லை. எனது பெஸ்டீஸ்களான பிரிந்தா மாஸ்டர், சுஜாதா விஜயகுமார், அனு பார்த்தசாரதி, மதுபாலா உள்ளிட்டோர் அடங்கி குரூப்பில் வீடியோ கால் பேசுவேன். இதேபோல் எங்களது பேமிலி குருப் ஒன்று உள்ளது. அதில் உள்ளவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடியோ கால் பேசுவேன்.
கணவர் சுந்தரும், அடுத்தப் படத்திற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டுள்ளார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் மற்ற நாட்களை விட ஊரடங்கு காலத்தில் நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன், வீட்டு வேலைகளை செய்துகொண்டு ஜாலியாக இருக்கிறேன்''.