படிப்படியாக காலியான பெங்களூர்.. சென்னையில் மட்டும் ஏன் கடைசி நேர கொந்தளிப்பு?
சென்னை: அப்பப்பா என்ன ஒரு கூட்டம்.. இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு போடப்படுகிறது.. மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது என்று சொன்னாலும் சொன்னார்கள், நேற்று மாலை முதல் , சென்னை கோயம்பேடாக இருக்கட்டும், திருப்பூர் பஸ் நிலையமாக இருக்கட்டும், இன்னும் பல இடங்களில் இருந்தும் மக்கள் முண்டியடித்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இவர்களுக்காக சிறப்பு பஸ் விட வேண்டும் என்று அரசுக்கு, கோரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. ஒருபக்கம் கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் முண்டியடித்து, காய்கறிகளை வாங்கி குவித்தனர். தனிமைப்படுத்துதல்தான், வைரஸ் பாதிப்புக்கு எதிராக மக்களை குணப்படுத்தும், சரிப்படுத்தும் என்று அறிவுரை கூறப்படும் நிலையில், மக்கள் ஆபத்தை விலை கொடுத்து வாங்கி விட்டார்களா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
அதேநேரம் கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நகரம் பெங்களூர். அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது முதலே மக்கள் தெருக்களில் நடமாடுவதை குறைத்துக் கொண்டனர். இப்படி முண்டியடித்து யாரும் சொந்த ஊர்களுக்கு பஸ்களில் செல்லவில்லை. சென்னைக்கு ஒரு நியாயம், பெங்களூருக்கு ஒரு நியாயம், எப்படி நடந்தது என்பது பற்றி நாம் விசாரித்தோம்.
இதில் சில தகவல்கள் கிடைத்தன. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் நகரங்கள் உற்பத்தி துறை சார்ந்து இயங்குபவை. பெங்களூர் கணிசமாக மென்பொருள் சார்ந்து இயங்கக் கூடிய நகரம். இதில், பல நிறுவனங்களும் ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை பார்க்கக் கூடிய வசதியை ஊழியர்களுக்கு கொடுத்துவிட்டனர்.
எனவே அவர்கள் வீடுகளுக்குள் இருந்து வேலை பார்க்கிறார்கள். சிலர் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கிருந்தபடி வேலை வருகிறார்கள். இதனால் படிப்படியாக மக்கள் கூட்டம் என்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருந்தே குறையத் தொடங்கிவிட்டது.
உற்பத்தி துறையை பொருத்தளவில் வீட்டிலிருந்து பணியாற்றுவது பெரும்பாலானோருக்கு இயலாத காரியம், நடைமுறை சாத்தியமற்றது. எனவே நிறுவனங்கள் மூடப்பட்டு, மொத்தமாக அவர்கள் ஊருக்கு கிளம்பி விட்டார்கள். அதுவும் கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணம். இன்னொன்று, தமிழகத்தில், ஒரே ஒரு நோயாளி மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தொடர்ந்து அரசு அறிவித்து வந்தது. இதனால் தமிழகத்தில் வைரஸ் பரவவில்லை, இந்த வெயிலுக்கு பரவாது என்றும் கூட பலரும் நினைத்துக் கொண்டு அலட்சியமாக இருந்தனர். ஆனால் திடீரென 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு, ஷட்டவுன் என்பது போன்ற வார்த்தைகள் தமிழ் மக்களுக்கு புதிதாக இருந்தது.
இதை யோசித்து பார்ப்பதற்குள், காலம் கைமீறிப் போய்விட்டது. தெருவில் கூட்டமாக வந்தாலே காவல்துறை அடித்து விரட்டும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. இந்த திடீர் மாற்றம் அவர்களை நிலைகுலைய வைத்து திடீரென கூட்டம்கூட்டமாக ஊருக்கு கிளம்ப வைத்துள்ளது.
பெங்களூர் போல முன்பே எச்சரித்து படிப்படியாக இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்தி இருந்தால் இவ்வளவு கூட்டநெரிசல் அவசியம் அற்றதாக மாறியிருக்கும் என்பதும் இதில் உள்ள வித்தியாசம்.
பெங்களூரில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். கன்னடம் தவிர தெலுங்கு, தமிழ், ஹிந்தி பேசுவோர் பரவலாக இருக்கிறார்கள். இவர்கள் தொலைதூரத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று, அவசரம் என்றால் திரும்பவும் உடனே வருவதற்கு கஷ்டம் என்பதால் பெங்களூரில் தங்கி விட்டனர். ஆனால் திருப்பூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்து நான்கைந்து மணி நேர பயணத்தில் ஊர்களுக்குச் செல்ல முடியும் என்று கிளம்பியவர்களும் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டனர்.