கழட்டி விடவா பாக்கறீங்க.. கிடுக்கிப் பிடி போட்டு அதிமுகவை வளைத்த பாஜக
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவை கழற்றி விட அதிமுக திட்டமிட்டு வந்தது. ஆனால் அதன் திட்டத்தை மோப்பம் பிடித்த பாஜக, சாதுரியமாக செயல்பட்டு கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டு விட்டதாம்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பாஜகவை கழட்டி விடலாம் என்றிருந்த நிலையில் எப்படி அமைந்தது அதிமுக பாஜக கூட்டணி – பின்னணியில் நடந்தது என்ன
கழகங்கள் இல்லாத தமிழகம் என்றெல்லாம் கனவு கண்டு, இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் தமிழகம் என்பதை கூட கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருந்த பாஜக தேர்தல் நெருக்கத்தில் அதிமுகவோடு எப்படியும் கூட்டணி அமைத்தே தீருவது என்ற முடிவுக்கு வந்தது. அதற்காக பல்வேறு வழிகளில் பயங்கரமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.
பாஜகவோடு கூட்டணி குழம்பு வைக்க வேண்டாம், ஏற்கனவே நமக்கும் தமிழக மக்களுக்கும் பிரச்சனையாக உள்ளது இதில் இவர்களை வேறு நமது வண்டியில் ஏற்றி இன்னும் ஏழரையை கூட்ட வேண்டுமா என்று அதிமுக தலைவர்கள் பலரும் முதல்வரிடம் போராடியுள்ளனர். தம்பிதுரை, பொன்னையன் போன்றவர்கள் வெளிப்படையாக கூட பேசிவந்தனர். இதனால் அவர்களையும் நாம் ஏன் சுமக்க வேண்டும் என்ற எண்ணம் அதிமுக தலைமை வட்டாரத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தலைமை செயலகத்துக்குள்ளேயே ரெயிடு, பல இடங்களில் வருமான வரி சோதனை, குட்கா வழக்கு, சேகர் ரெட்டி விவகாரம் என்று இந்த விவகாரங்கள் எல்லாம் கண்ணுக்குள் வந்து செல்ல எப்படி இவர்களை கழட்டி விடுவது என்று பலமான யோசனையில் ஆழ்ந்து ஒரு வழியை கண்டு பிடித்துள்ளனர். அதாவது தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிட்டால் மத்திய அரசுக்கு இப்போது இருக்கும் பவர் இருக்காது, ஒரு காபந்து அரசாகத்தான் இருக்கும். அப்போது அவர்களால் சி.பி.ஐ., ரெயிடு என்றெல்லாம் மிரட்ட முடியாது என்று திட்டமிட்டிருந்தனர்.
இதை ஐ.பி மூலம் மோப்பம் பிடித்துவிட்ட பாஜக அதிமுகவிடம் பேசியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வரும்வரை நாங்கள் காத்திருக்க தயார் இல்லை என்றும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நீங்கள் பாஜகவை தவிர்த்துவிட்டு வேறு அணி அமைக்க முயற்சிப்பதும் எங்களுக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்கள். அதோடு தேர்தல் அறிவிப்பு வரும் வரை கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டாம் என்ற முடிவில் நீங்கள் இருந்தால் இப்போதே ரெயிடு, சி.பி.ஐ விசாரணை என்றெல்லாம் வருவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன என்றும் அதற்கான செயல் திட்டங்கள் என்ன என்பதையும் மிக தெளிவாக விளக்கியுள்ளனர்.
கூடவே ஜெயலலிதா இறந்த பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் என்னென்ன பிரச்சனைகள் வந்தன. அதற்கு பாஜக எப்படியெல்லாம் உதவியது என்ற விவரங்களை அடுக்கியவர்கள் ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சிதான் வரும் நாம் தப்பித்து விடலாம் என்று எண்ணினீர்கள் என்றால் அப்போதும் ஸ்டாலின் வடிவில் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கு அவர் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதன் பின்னரே எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஒத்துக் கொண்டாராம். ஆனால் பாஜக கேட்கிறபடி அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாது என்பதில் கறாராக நின்றுள்ளனர். ஏற்கனவே பாஜகவோடு கூட்டணி என்பதையே கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை இந்நிலையில் அதிக தொகுதிகளை ஒதுக்கினால் அது இன்னும் பிரச்சனையாகும். ஆகவே 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதோடு தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியையும் அவர்கள் தேர்தலில் தனித்து நின்றால் கிடக்கப் போகும் வாக்கு சதவீதத்தையும் பட்டியலிட்டு காண்பித்துள்ளனர். எப்படியும் 8 தொகுதிகளையாவது பெற்று விடவேண்டும் என்று குறியாக நின்ற பாஜகவினர் அதன் பிறகே ஐந்து தொகுதிகளுக்கு ஒத்துக் கொண்டனராம்.