காலியாகவுள்ள 3 ராஜ்யசபா எம்பி பதவிகள்.. தேர்தல் நடத்த சிக்கல்.. என்ன செய்யும் தேர்தல் ஆணையம்?
சென்னை: வேறு வேறு காலகட்டங்களில் தேர்வான மூன்று ராஜ்யசபா எம்பிக்களின் பதவிகள் காலியாகவுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்த 3 பதவிகளுக்கும் எப்போது எப்படி தேர்தல் நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் லோக்டபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகள் உள்ளதும் அனைவருக்கும் தெரியும். அது போல் லோக்சபாவுக்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் வாக்களித்து எம்பிக்கள் தேர்வாகிறார்கள். ஆனால் ராஜ்யசபாவுக்கு தேர்த்ல நடத்தப்பட்டு அந்தந்த மாநில எம்எல்ஏக்கள் வாக்களித்து எம்பியாக நியமிக்கப்படுவார்கள்.
லோக்சபாவில் 543 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 245 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் லோக்சபா எம்பிக்களுக்கு 5 ஆண்டுகளும், ராஜ்யசபா எம்பிக்களுக்கு 6 ஆண்டுகளும் பதவிக்காலம் ஆகும். இதில் ராஜ்யசபா எம்பிக்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பதவிக்காலம் முடியும்.
அதிருப்தியாளர்களை சமரசம் செய்யும் ஈபிஸ்... ராஜ்யசபா சீட்டை முன்வைத்து ஜெயக்குமார் விக்கெட் அவுட்!
ராஜ்யசபா அதிமுக
ராஜ்யசபாவில் அதிமுகவுக்கு 8 எம்பிக்கள் இருந்த நிலையில் முகமது ஜான் மறைவால் 7 எம்பிக்களாகினர். அதன் பின்னர் கே பி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இரு எம்பிக்களும் சட்டசபை தேர்தலில போட்டியிட்டு வென்றார்கள். இவர்கள் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
ராஜ்யசபாவில் அதிமுக பலம்
இதனால் ராஜ்யசபாவில் அதிமுகவின் பலம் 5ஆக குறைந்துவிட்டது. இந்த நிலையில் 3 காலியிடங்களுக்கு தேர்தல் நடத்துவது எப்போது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இந்த மூன்று எம்பிக்களுமே வெவ்வேறு காலகட்டங்களில் எம்பியாக நியமிக்கப்பட்டவர்கள்.
யார் எப்போது
அதாவது வைத்திலிங்கம் 2016-ல், முகமது ஜான் 2019-இல், கேபி முனுசாமி 2020-ல் ராஜ்யசபாவுக்கு தேர்வாகினர். இது போல் வெவ்வேறு ஆண்டுகளில் தேர்வாகிய 3 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிகள் காலியாக இருக்கும் இந்த சம்பவம் தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
3 அறிக்கை
பொதுவாக தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி காலியிடங்களுக்கு ஒன்றாக தேர்தல் நடத்தப்படும். இந்த நிலையில் இந்த 3 பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டுமானால் 3 தனித்தனி அறிக்கைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இப்போதா? அடுத்த ஆண்டா?
இல்லாவிட்டால் மீதமுள்ள 5 எம்பிக்களின் பதவிக்காலம் தம்பிதுரைக்கு 2026- லும், சந்திரசேகரனுக்கு 2025-லும், நவநீதகிருஷ்ணன், எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் 2022 இலும் முடிகிறது. எனவே அடுத்த ஆண்டு அதாவது 2022 இல் மேற்கண்ட மூவரின் பதவிக்காலம் காலியானவுடன் ஏற்கெனவே காலியாக உள்ள பதவிகளுடன் சேர்த்து 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுமா இல்லை இப்போதே நடத்தப்படுமா என்பது தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவில் உள்ளது.