நாய்க்கறியா சாப்பிடுவோம்.. வதந்தியை பரப்பியது யார்.. ஷகீலாபானு கேட்ட கேள்விக்கு பதில் எங்கே?
நாங்கள் எப்படி நாய்க்கறியை பயன்படுத்துவோம் என்று ஷகிலா பானு கேள்வி எழுப்பினார்.
Recommended Video
சென்னை: "நாங்க முஸ்லீம்.. எப்படி நாய்க்கறியை சாப்பிடுவோம், அடுத்தவங்களுக்கு கொடுப்போம்" என்று ஷகீலா பானு கேட்ட கேள்விக்கு இதுவரை யாருமே பதில் சொல்லவில்லை.
எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி என்று கிளப்பிட அது தமிழகமெங்கும் பரபரப்பானது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை... சென்னையில் உள்ள பெரும்பாலான அசைவ ஹோட்டல்கள் அன்று ஈயாடி கொண்டிருந்தன.
இதையடுத்து பிரியாணி கடை நடத்தி வரும் ஷகீலா பானு என்பவர் செய்தியாளர்களிடம் பேசினார். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி மொத்தம் 4 பேருக்கு சொந்தமானது. இதில் ஷகிலா பானுவும் ஒருத்தர். அப்போது ஷகிலா பேசும்போது சொன்னதாவது:
சென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு
நாங்க முஸ்லீம்ங்க
"நாங்க முஸ்லீம்ங்க... மாட்டுக்கறிதான் சாப்பிடுவோம். அது எப்படி நாய்க்கறி சாப்பிடுவோம்.. எப்படிங்க நாய்க்கறியை விப்போம்.. இது யாரோ வேண்டாதவங்க பண்ண வேலை. முதல்ல ரயிலில் வந்தது நாய்க்கறிதான் என்பதற்கு என்ன ஆதாரம்? இப்படி என்ன, ஏதென்னு தெரியாததுக்கு முன்னமேயே என் கறியில பெனாயில ஊத்தி வச்சி நாசம் பண்ணியிருக்காங்க
தண்டனை ஏத்துக்கறோம்
பினாயில ஊத்தனது போக மீதி கொஞ்சம் கறி பினாயில் ஊத்தாமலும் இருக்கு. அதை முதல்ல செக் பண்ணி பாருங்க எல்லாரும். அது என்ன நாய்க்கறியா? இல்லை ஆட்டுக்கறியா?ன்னு தெரியும். அப்படி நாய்க்கறிதான்னு தெரிஞ்சிட்டா, என்ன தண்டனை கிடைக்குதோ அதை நாங்க ஏத்துக்கறோம். ராஜஸ்தான்ல இருந்து நாங்க ஸ்பெஷல்லா இந்தக் கறியை வரவழைக்கிறோம்" என்றார். இப்போது ஆய்வில் அது நாய்க்கறி இல்லை என்பது தெரிந்துவிட்டது.
யதார்த்த கேள்வி
பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி என்று பகீரை பரப்பி விட்டவர்கள் யார்? எதற்காக பரப்ப வேண்டும்? என்ன நோக்கம்? என்பது தெரியவில்லை. தொழில் போட்டியோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனையோ, எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் சாப்பிடக் கூடிய விஷயங்களிலா விளையாட வேண்டும்? இந்த வதந்தியை பரப்பியவர்களும், நம்பியவர்களும்கூட, "நாங்கள் எப்படி நாய்க்கறியை பயன்படுத்துவோம்" என்ற யதார்த்த இஸ்லாமிய வார்த்தைகளின் உண்மைகளை நம்பவில்லை என்பது கூட ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது.
ஷகிலா கேட்ட கேள்வி
இப்படி தவறான வதந்தியை பரப்பி விட்டவர்கள் மீது காவல்துறை தகுந்த தண்டனையை எடுக்க வேண்டும். இனி உணவு விஷயத்தில் இப்படிப்பட்ட வதந்திகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி பீதி உண்டாக்காத வண்ணம் கடுமையான எச்சரிக்கையை விட வேண்டும். "தப்பு செய்தோம் என்று நிரூபணமானால் தண்டனையை ஏத்துக்கறோம்" என்று துணிந்து சொன்னார் ஷகிலா பானு. இப்போது அவர் தவறு செய்யவில்லை என்பது நிரூபணமும் ஆகிவிட்டது. ஆனால் ஷகிலா கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.