ஆச்சர்யமான தகவல்...மனித மரபணுவும்-வைரஸ்களும்.. சிலரை கொரோனா மோசமாக பாதிப்பது ஏன்?
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று சிலரை மட்டும் மோசமாக பாதிப்பதும், சிலரை ஒன்றும் செய்யாமல் விடுவது குறித்து ஆச்சர்யமான பல தகவல்கள் உள்ளன. இதுபற்றி மருத்துவர் பேராசிரியர் முத்து செல்லக்குமார் விளக்கம் அளித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், "கோவிட்-19, 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைத்தான் பெரிதும் பாதிக்கிறது என்று சொல்கிறார்கள். இவர்களின் உடல் மோசமாக பாதிக்கப்படுவதால், தீவிர சிகிச்சைத் தேவைப்படுகிறது என்கிறார்கள். இவர்களில் பலரும் இறக்கவும் நேரிடுகிறது.ஆனாலும் இளம் வயதினரும் சிலர் மிகவும் தீவிர பாதிப்புக்கு உட்படுகிறார்கள், இவர்களிலும் சிலரை இழக்க நேர்கிறது.
கோவிட் தொற்று, சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம்,இதய நோய்,கல்லீரல்,சிறுநீரக நோய்கள்,புற்று நோய்,காச நோய், என பல்வேறு நோய்கள் ஏற்கனவே உள்ளவர்களைப் பாதித்து உடலை மிகவும் மோசமாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்லப்பட்டாலும் எந்தவித நோயும் இல்லாதவர்களும் தீவிர நோய்க்கு ஆட்படுவதுடன், இறக்கவும் நேரிகிறது. ஆண்களைத்தான் பெரிதும் பாதிக்கிறது இறப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் கூட,பெண்களையும் தீவிரமாக பாதித்து இறப்பை ஏற்படுத்தி உள்ளது.
குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
உயிரிழப்புக்கு காரணம்
ஆக, தீவிரமான கொரோனா பாதிப்பு நாம் ஏற்கனவே கணித்து எதிர்பார்த்தவர்களுக்கு மட்டுமல்லாமல்,எதிர்பார்க்காதவர்களுக்கும் ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
அப்படியென்றால், எதிர்பார்க்காதவர்களுக்கு கோவிட் ஏற்படவும், தீவிரமடையவும், உயிரிழப்பு ஏற்படவும் ஏதோ வேறு சில காரணங்கள் இருக்கிறது என்பது புலப்படுகிறது.
இதனைக் குறித்து மருத்துவ அறிஞர்களும்,ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களும் தொடர்ந்து காரணத்தைக் கண்டறிய முயன்று வருகிறார்கள்.
பல ரகங்கள் மாறி இருக்கிறது
கோவிட் வைரஸ் மாற்றமடைந்ததாலும்(mutation) ,பல ரகங்களாக மாறி இருப்பதாலும்,அவற்றின் தொற்று ஏற்படும் விதம்,பரவும் வேகம், உடலை பாதிக்கும் தன்மையில் மாற்றம் இருக்குமோ என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
ரத்தவகை, காரணமா?
அதே போன்றே, நோயாளியின் உடல் எதிர்ப்பாற்றல்,மரபணுவின் குணாதிசயங்கள்,ரத்தவகை ஆகியவற்றைப் பொறுத்தம், தொற்றின் தன்மை, அதன் தீவிரம் மாறலாம் என்ற கோணத்திலும் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து ஓயாமல் நடை பெறுகிறது.
மனித மரபணு காரணம்
விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட,நம் பூமியில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கை அதிகம் இருக்குமென அறிஞர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.
இவற்றில் பல்வேறு வைரஸ்கள் மனிதர்களைத் தொடர்ந்து பாதித்து நோய்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் மனித மரபணு தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகிறது.
மனித செல்களில் நியூக்லியஸ்
மனித செல்களில், நியூக்லியஸ் என்ற முக்கியப் பகுதி இருக்கும். இதில் குரோமோசோம்கள் காணப்படும்.மனித உடலில் இவை 46 இருக்கும். இதற்குள் தான் மனித டி.என்.ஏ.இருக்கும். இவற்றில் இருக்கும் நுட்பமான அமைப்புகள் தான் ஜீன்ஸ் எனப்படும் மரபணு அமைப்புகள். இந்த மனித மரபணுக்கள் தான் மனிதனின் பல்வேறு உடல் இயக்கங்களையும்,அங்கு நடைபெறும் பல்வேறு உயிர்-ரசாயன வினைகளையும் தீர்மானிக்கின்றன. புரத உற்பத்திக்கு கட்டளையிடுகின்றன.மனித உடலில் சுமார்,20,000 முதல்25000 மரபணுக்கள் இருக்கலாமென அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கையைக் குறித்தும் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறுகிறது.
மனித டி.என்.ஏ.வை நகலெடுக்கும்
ரிட்ரோவைரஸின் மரபணுக்கள் ஆர்.என்.ஏவை அடிப்படையாகக் கொண்டவை. இந்த வகை வைரஸ்கள்,' ரீவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ்' (Reverse transcriptase (RT))என்ற ஒரு சிறப்பான நொதியை கொண்டிருக்கும். மனிதர்களின் உடலிலுள்ள டி.என்.ஏ அடிப்படையிலான மரபணுவில் நுழைய, வைரஸ்களுக்கு இவ்வகை நொதி பெரிதும் உதவுகிறது.
அங்கு மனித டி.என்.ஏ.வை பயன்படுத்தி இவை தங்களது வாரிசுகளை நகல் எடுக்கும். இவை, அதன்பின் அந்த செல்லை விட்டு வெளி வந்து அருகிலுள்ள செல்களை தங்கள் பெருக்கத்திற்கு பயன்படுத்தும்.இவ்வாறு மில்லியன்,மில்லியனாக பெருகி மனித உடலில் நோயை ஏற்படுத்துகின்றன.
மனித உடலில் வைரஸ்
அதே நேரம், சிதையும் சில வைரஸ்கள்,தன் பிறழ்வு ஏற்படும் போது மாறும் சில வைரஸின் நுட்பமான பாகங்கள்,நமது மரபணுவோடு சேரும் போது ஏற்படும் சில உயிரியல் மாற்றங்களால் மனித மரபணுவோடு சேர்வது மட்டும் அல்லாமல் அதன் பாகமாகவே அவை மாறி விடுகின்றன. ஆக, நம்மை மரணிக்கச் செய்கின்ற சில வைரஸ்களுக்கு நமது மரபணு மாயான பூமியாகிவிடுகிறது! நமது மனித மரபணுவின் மொத்த அளவில் 8% வைரஸ்களால் ஆனது. மனித மரபணு வெறும் 2% புரதத்தை மட்டுமே குறியீடுகிறது என்பதுவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு மனித மரபணுவின் பாகங்களாக மாறிய வைரஸ் கூறுகளால் சில நன்மைகளும்,சில தீமைகளும் ஏற்படுகிறது.
,எச் ஐ வி வைரஸ் ஏற்படாது
மனித மரபணு இயல்பிற்கும், வைரஸ் தொற்று மனித உடலில் ஏற்பட்டு உடலைப் பாதிப்பதற்கும் தொடர்பு உண்டு என்பதற்கு ஆதாரம் 'ஸ்டீபன் லியோன் கிரோன்' தான்!
அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்த இவரின் மரபணுவில்"டெல்டா 32" பிறழ்வு (delta 32" mutation on the CCR5 receptor,)இருந்தது.இதன் காரணமாக, இந்தப் புரத மாறுபாட்டால்,எய்ட்ஸை உருவாக்கும்,எச் ஐ வி வைரஸ்கள், இவரது வெள்ளை அணுவில் உட்புக முடியவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,இவருக்கு,எச் ஐ வி வைரஸ்களால்,எய்ட்ஸ் ஏற்படாது என்பது உறுதியானது.
ஏற்படும் தீமைகள்
மனித மரபணுவோடு இணைந்த வைரஸ் குப்பை பாகங்கள்(junk DNA.)என்று கருதப்பட்டன.ஆனால்,அவை இன்று மனித பெருக்கம் தொடங்கி,மூளை வளர்ச்சி,இனவிருத்தி,உடல் எதிர்ப்பாற்றல் வரை பல காரணங்களுக்காக நமக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆதிகாலத்தில், மனித மரபணுவிற்குள் வந்த வைரஸ்கள்,அமைதியாக இருந்த போதும், தற்சமயம் வைரஸ் தொற்று ஏற்படும் போது,அதனை எதிர்க்கும் மரபணுக்களை தூண்டிவிடுவதுடன்,ஆரம்ப செல் அலாரத்தை முடுக்கிவிடுவதற்கும், (Alarm of the innate immune system))இண்டர்ஃபெரான் உற்பத்திக்கும்(IFN-1.) பெரிதும் உதவுகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். மனித மரபணுவில் 'ஆர்க்"( Arc gene)என்றொரு மரபணு உள்ளது.இந்த மரபணு வைரஸிடம் இருந்து தான் உருவாகி இருக்கிறது என்று கண்டறிந்துள்ளார்கள். இது, மரபணு நினைவாற்றலுக்கு (Memory genes) உரியதாகும். மனித நஞ்சுக்கொடியை உண்டாக்க தேவையான புரதத்தை உற்பத்தி செய்ய உதவும் மனித மரபணுவும் ஒரு வைரஸில் இருந்து உருவானது தான்.
ஏற்படும் தீமைகள்: இந்த வைரஸ் பகுதிகளில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மனிதர்களுக்கு ஆண்மை குறைபாடு,சில புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மனித மரபணு எதிர்காலம்
ஆக,மனிதன் ஆதி காலத்தில் சில அடிப்படை மரபணுக்களோடு தோன்றினாலும், அவன் வாழ்விடம், சூழ்நிலை, அவனைப் பாதித்த பல்வேறு வைரஸ் தொற்றுகள் அதனால் அவன் உடல் மரபணுவில் ஏற்பட்ட மாறுதல்கள், இவையெல்லாம் சேர்ந்து, நவீன மனிதனை ஒரே ஒரு புதிய வைரஸிற்கு பல்வேறு விதமாக செயல்பட வைக்கிறது. நோய்அறிகுறியே இல்லாமல்,நோய் வந்ததே தெரியாமல் ஒருவர் இருக்க,மற்றொருவரை எக்மோ-வென்டிலேட்டர் போன்ற அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயரிய தீவிர சிகிச்சையால் கூட காப்பாற்ற முடியாமல் போகிறது! ஆக, மனித மரபணுக்களை மேலும் ஆராய்ந்தால்,ஏன் சிலருக்கு பாதிப்பு குறைவாகவும், சிலருக்கு பாதிப்பு மோசமானதாகவும் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். இது கோவிட்டிற்கு மட்டுமல்ல,எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் புதிய வைரஸ் சிகிச்சைக்கும்,அதன் தடுப்பிற்கும் பெரிதும் உதவும்" இவ்வாறு கூறியுள்ளார்.