மறக்க முடியாத மார்ச் 31.. ஏமாற்றிய ஏப்ரல் 1.. தமிழக முதல்வர் எச்சரிக்கையின் பின்னணி!
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 834 என்ற அளவில் உள்ளது.
Recommended Video
இதன் அர்த்தம், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்பதுதான். மகாராஷ்டிர மாநிலத்தில் 1364 நோயாளிகள் உள்ளனர்.
தமிழகம், இந்த பட்டியலில், இரண்டாவது இடத்துக்கு செல்லும் என்று மார்ச் இறுதி வரை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் குறைவாக, மிகுந்த கட்டுப்பாட்டுடன் தான் புள்ளி விவரம் இருந்தது.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகம் மிகச் சிறப்பாக இந்த பிரச்சனையை கையாண்டு வருவதாகத்தான், அப்போது பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அப்படியானால், எப்போது முதல் தமிழகத்தில் இந்த பிரச்சினை மிக வேகமாக அதிகரித்தது என்பது பற்றி பார்க்கலாம்.
ராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்!
மார்ச் 27
மார்ச் 27ம் தேதி தமிழகத்தில் புதிதாக 9 நோயாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டனர். மார்ச் 28ஆம் தேதி அதை விடவும் குறைவு. நான்கு பேர் மட்டும்தான். ஆனால் மார்ச் 29ம் தேதி 10 பேர் என்ற எண்ணிக்கையில் இது கூடியது. மார்ச் 30ஆம் தேதி 17 பேர் புதியதாக கண்டறியப்பட்டன. இதுவரை கூட பரவாயில்லை, ஓரளவுக்கு குறைந்த எண்ணிக்கையில்தான் நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருந்தனர். ஆனால் மார்ச் 31-ஆம் தேதி தான் மிக முக்கியமானது. அன்று ஒரே நாளில் 57 புதிய நோயாளிகள் இந்தப் பட்டியலில் இணைந்தனர்.
மோசமான நாள்
ஏப்ரல் 1ஆம் தேதியை தமிழக சுகாதாரத்துறை மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு அதுவரை இல்லாத விகிதத்தில் நோயாளிகள் எண்ணிக்கை கூடிய நாள் அதுதான். உலக முட்டாள்கள் தினமான அன்று இந்த கொடிய நோய் நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டு கிடுகிடுவென தமிழகத்தில் அதிகரித்தது. அன்று ஒரே நாளில் 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஏப்ரல் 3ம் தேதி மிக அதிகம்
ஏப்ரல் 2ஆம் தேதி 75 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஏப்ரல் 3ம் தேதி இது 102 என்ற அளவுக்கு அதிகரித்தது. இரண்டாவது முறையாக 100ஐக் கடந்தது அன்றுதான். ஏப்ரல் 4ஆம் தேதி, 74, ஏப்ரல் ஐந்தாம் தேதி 86, ஏப்ரல் 6ஆம் தேதி 50, ஏப்ரல் 7ம் தேதி, 69, ஏப்ரல் 8ம் தேதி 48, ஏப்ரல் 9ம் தேதியான நேற்று 96 என்ற அளவுக்கு தமிழகத்தில் நோயாளிகள் நிலை உள்ளது.
முதல்வர் எச்சரிக்கை
சற்று குறைவது, பிறகு அதிகரிப்பது என்ற விகிதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சுகாதாரத்துறையை பொறுத்தளவில் இதில் பெரும்பாலான நோயாளிகள் ஒரே இடத்துக்கு சென்று வந்தவர்கள் என்று கூறுகிறது. எனவே தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்று அரசு கூறுகிறது. அதேநேரம் தமிழகம் எப்போது வேண்டும் என்றாலும் மூன்றாவது ஸ்டேஜுக்கு செல்லக்கூடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை எளிதில் கடந்து செல்ல முடியாது.
லாக்டவுன்
முதல்வர் கூறுகிறார் என்றால் வரும் நாட்களில் நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவேதான் லாக்டவுனை நீட்டிக்க கூடிய முடிவுக்கு தமிழகமும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மக்கள் வீடுகளுக்குள் இருப்பது மட்டும் இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு முக்கியமான வழிமுறை ஆகும் என்பதை மறந்துவிட வேண்டாம்.