செல்லாத நோட்டுகளை கொண்டு சசிகலா சொத்துகளை வாங்கியது எப்படி.. ஐடி அதிகாரிகளிடம் சிக்கிய வசமான ஆதாரம்
சென்னை: பணமதிப்பிழப்பின் போது ரூ 500, ரூ 1000 நோட்டுகளை வைத்து சசிகலா ரூ 1674 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விவரங்கள் துண்டுச் சீட்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ 500, ரூ 1000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவோ அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து ரூ 1674.5 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்ததாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. சசிகலா வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு துண்டுச் சீட்டுதான் இதை காட்டிக் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எச் ராஜாவை எச்சு என்று கூறிய குஷ்புவுக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்!
சோதனை
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற போது கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. 187 இடங்களில் , 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
சீட்டு
அப்போது விசாரணை வளையத்தில் சிக்கிய சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் ஒரு துண்டு சீட்டின் படம் இருந்தது. அந்த துண்டு சீட்டு குறித்து விசாரித்த போது சசிகலா பரோலில் வந்த போது தனது வீட்டில் தங்கியிருந்தார் என்றும் அது பணம் கொடுக்கல் வாங்கல் குறித்த சீட்டாக இருக்கும் என்பதால் செல்போனில் போட்டோ எடுத்து வைத்துவிட்டு அந்த சீட்டை எரித்துவிட்டதாகவும் கிருஷ்ணப்பிரியா தெரிவித்தார்.
ஒப்பந்தம்
அந்த துண்டுச் சீட்டை வைத்து விசாரணை நடத்தியதில் அதிலிருந்தது வழக்கறிஞர் செந்திலின் கையெழுத்து என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கையில் உள்ள செல்லாத நோட்டுகளை கொண்டு சொத்துகளை வாங்கும் பணியை சரி பார்க்குமாறு தெரிவித்தார். அதன்படி சில சொத்துகள வாங்கி அதன் ஒப்பந்தத்தை நகல் எடுத்து கொடுத்ததையும் செந்தில் தெரிவித்தார்.
துண்டுச்சீட்டு எரிப்பு
பின்னர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அந்த சொத்து விவரங்களை எழுதி துண்டுச் சீட்டில் எழுதி கவரில் வைத்து கொள்ளுமாறும் சசிகலா கூறியிருந்தார். பின்னர் 2017-இல் பரோலில் வந்த போதும் தன்னை மீண்டும் அவர் அழைத்து அந்த துண்டுச் சீட்டை வாங்கி பார்த்துவிட்டு அதை எரித்துவிடுமாறு தெரிவித்ததாகவும் செந்தில் கூறினார்.
சொத்துகள் குவிப்பு
அந்த துண்டுச் சீட்டை தான் கிருஷ்ணப்பிரியா புகைப்படம் எடுத்துள்ளார். அதுதான் இந்த வழக்கில் துருப்புச் சீட்டாக இருந்தது என தெரிவித்தார். விசாரணையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
பழைய நோட்டுகள்
அதன்படி புதுவை ரிசார்ட்டை ரூ 168 கோடிக்கு விலை பேசி ரூ 148 கோடி மதிப்பிலான ரூ 500 பழைய நோட்டுகளை கொடுத்துள்ளார். ரூ 97 கோடியை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்காக ரிசார்ட் உரிமையாளர் மாற்றியுள்ளார். பழைய மகாபலிபுர சாலையில் ஐடி நிறுவனத்தை ரூ 115 கோடிக்கு பேரம் பேசியுள்ளார். அதுவும் பழைய நோட்டுக்களையே கொடுத்துள்ளார்.
சர்க்கரை ஆலைகள்
ரூ 6 கோடியை வங்கியிலும் மீதமுள்ள பணத்தை 7 பேருக்கு அனுப்பி அதை புதிய நோட்டுகளாக மாற்றியுள்ளார் ஐடி உரிமையாளர். அது போல் சென்னையில் வணிக வளாகங்கள், பேப்பர் மில், சர்க்கரை ஆலைகள், காற்றாலைகள் ஆகியவற்றையும் வாங்கியுள்ளார்.