வெறும் குமாரு.. அரசகுமார் ஆன கதை இதுதான்!
சென்னை: தமிழக அரசியலில் கடந்த 2 நாட்களாக அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் பி.டி.அரசக்குமார். பாஜகவில் துணைத்தலைவராக உள்ள இவர் திமுகவை புகழ்ந்து பேசியதே அவர் சர்ச்சையில் சிக்கியதற்கான காரணம்.
இந்நிலையில் பி.டி.அரசகுமாரின் பின்னணி குறித்தும் அவருடையை ஆரம்பகால அரசியல் வாழ்க்கை பற்றியும் நாம் விசாரித்ததில் பல சுவராஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
முதலில் திமுகவில் இருந்த அவர் பின்னர் அதிமுக விசுவாசியாக மாறி ஒரு கட்டத்தில் தனிக்கட்சி தொடங்கி நடத்திவந்தார். பின்னர் அதையும் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
அரசியல் ஆசை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். மணப்பாறை தியாகேசர் மில்லில் பணிபுரிந்து அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவருடைய மகன் குமாருக்கு அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை பள்ளி பருவத்திலேயே வந்துவிட்டது.
மணப்பாறையில் படிப்பு
மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் உள்ள தியாகேசர் ஆலை பள்ளியில் படித்த குமாரிடம் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்ற கனல் இருந்துகொண்டே இருந்தது. எம்.ஜி.ஆர்.ரசிகனான அவர் அவரது மறைவுக்கு பிறகு கருணாநிதியை தனது தலைவனாக ஏற்று செயல்படத்தொடங்கினார்.
பணம் சம்பாதிப்பது
அரசியலில் வெறுமனே கொள்கையுடன் செயல்பட்டால் மட்டும் சோபிக்க முடியாது என்பதை உணர்ந்த குமார், கல்வி நிறுவனம் தொடங்குபவர்களுக்கு அனுமதி பெற்று தரும் வேலைகளில் ஈடுபடத்தொடங்கினார். 90 காலகட்டம் என்பது சென்னைக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெறுவதெல்லாம் குதிரைக் கொம்பாக பார்க்கப்பட்ட காலம். இதை சாதகமாக பயன்படுத்திய குமார், 91-96 அதிமுக ஆட்சியில் தொடர்புகளை விரிவுபடுத்தி காரியங்களை கணக்கச்சிதமாக செய்து கொடுத்து வந்தார்.
மெட்ரிக் பள்ளி
தமிழ்நாடு நர்சரி பள்ளிகள் சங்கத்தை தொடங்கிய அரசகுமார் அதன் மூலம் கொட்டிய பணத்தைக் கண்டு கல்வி நிறுவனத் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவது என முடிவெடுத்தார். ஆரம்பகாலத்தில் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்ட தொழிலதிபர்களை சந்தித்து கல்வி நிறுவனங்களை தொடங்குமாறும், அதற்கு தேவையான அனைத்து பணிகளையும் தாம் முடித்துத் தருவதாகவும் வலியுறுத்துவார்.
தனிக்கட்சி
முதலில் திமுக இருந்த குமாருக்கு அதிமுக ஆட்சியில் பல முக்கியத் தொடர்புகள் கிடைத்ததால் போயஸ் கார்டனுக்கும் தனது விசுவாசத்தை காட்டினார். பின்னர் அவர் மீது பணமோசடி வழக்குகள் வரிசைகட்டி நின்றதால் திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். அப்போதெல்லாம் விராலிமலை குமார், அல்லது பி.டி.குமார் என்றால் தான் அவரை தெரியும்.
சொகுசு கார்
ஆரம்பக்காலத்தில் ஆம்னி கார் வைத்திருந்த அரசகுமார், விராலிமலையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. பாஜகவில் இணைவதற்கு முன்னரே விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர், மணப்பாறை, வையம்பட்டி, துவரங்ககுறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கென தனி ஆதரவாளர்கள் வட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூமராலஜி
இந்நிலையில் கடந்த 2010 நவம்பர் மாதம் மதுரையில் வைத்து தனது கட்சி பெயரை மாற்றினார் இவர். திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத்தை அகில இந்திய தேசிய பார்வார்டு பிளாக் என பெயர் மாற்றம் செய்தார். மேலும், நியூமராலஜி படி தனது பெயரான குமாருடன் அரச என்ற வார்த்தையையும் சேர்த்து பி.டி.அரசகுமார் என மாற்றிக்கொண்டார்.
தமிழிசை அழைப்பு
தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சோபிக்காததால் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட முடிவு செய்து அது தொடர்பாக அப்போதைய பாஜக தலைவர் தமிழிசையை சந்தித்து பேசினார். அவர் ஒப்புதல் தந்து அழைப்பு விடுக்க, சென்னை மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் போட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்சியை கூண்டோடு கலைத்து பாஜகவில் இணைந்தார் அரசகுமார்.