சில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா?
சென்னை: இந்தியாவில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் சில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வருகின்றன. அந்த நிறுவனங்கள் தனது செயலால் நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வேலைகளை பறித்து வருவதுடன் மொத்தமாக இந்தியாவின் சில்லறை வணிகத்தை அபகரித்து வருகின்றன.
முக்கிய நாட்களில் தள்ளுபடி போட்டு மொத்த வணிகத்தையும் காலி செய்யும் இந்நிறுவனங்களின் செயலுக்கு அரசு கடிவாளம் போட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
ராமசாமிகளும் குப்புசாமிகளும் வைத்திருந்த சிறிய பெட்டிக்கடைகள், ஜவுளிக்கடைகள், மளிகைக் கடைகளில் இப்போது பொருள் வாங்குவது பெருமளவு குறைந்J வருகிறது. எல்லாமே மொபைலில் ஒற்றை ஆப்பில் ஆர்டர் செய்தால் போதும். குப்புசாமிகளும், ராமசாமிகளும் கொடுக்கும் விலையைவிட குறைந்த விலைக்கு வாங்கிவிட முடியும். இது தான் இந்தியாவின் எதார்த்த நிலையாக உள்ளது.
செல்போன் விலை
ஒரு செல்போனை ஆன்லைனில் வாங்கினால் கடையில் உள்ளதைவிட மிக குறைந்த விலைக்கு (அதாவது 500 முதல் 1000 வரை) வாங்கிவிட முடியும். ஏன் பாதி விலைக்கு கூட ஆன்லைன் நிறுவனங்களால் தர முடியும். ஏனெனில் அவர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துள்ள வெளிநாட்டு ஜாம்பவான்கள். ஆனால் நம்ம ஊர் சில்லறை வணிகர்களால் அந்த அளவுக்கு குறைந்தது வழங்க இயலாது என்பது நமக்கே தெரியும்.
குறைந்த லாபம் போதும்
இந்தியாவில ஆன்லை நிறுவனங்கள் செல்போன் மட்டுமல்ல, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை குறைந்த விலைக்கு விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றன. இதன் மூலம் ஒரு கடையின் வியாபாரத்தை தாண்டி, பல ஆயிரம் கடைகளின் வியாபாரத்தையும் இந்த நிறுவனங்கள் பறிக்கின்றன. அவர்கள் எந்த ஊரிலும் கடைகள் போடவில்லை. பெரிய அளவில் யாருக்கும் வேலை அளிக்கவில்லை. டெலிவரி செய்யும் கொரியர் வேலையை தவிர மற்ற எந்த வேலைக்கு இவைகள் ஆட்களை பெரியஅளவில் நியமிக்கவில்லை. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் இவர்களால் பொருட்களின் விலையை குறைத்து விற்க முடிகிறது.
இதுவும் அவர்களின் திட்டம்
ஏன் நஷ்டத்திற்கு பொருட்களை விற்றுக்கூட வாடிக்கையாளர்களை பெரும் அளவு கவர்வதும் இவர்களின் ஒரு வகை திட்டம் தான். இதன் மூலம் நாம் ஆன்லைனில் வாங்குவதற்கு அடிமையாகி விடுவோம். அதன்பிறகு கடைக்கு செல்வதை விரும்ப மாட்டோம். இதன் மூலம் மொத்த சந்தையையையும் ஒரு நாள் இவர்களால் கைப்பற்ற முடியும். இதற்கு தான் நஷ்டத்திற்கு கூட பொருட்களை விற்க இந்த நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
வேலை போய்விடும்
இந்த நிறுவனங்கள் வெறும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஆடைகளுடன் மட்டுமல்ல, அரிசி, மளிகை சமான்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்தையும் விற்கும் காலம் மிக விரைவில் வரலாம். இப்போதே சில நிறுவனங்கள் இவற்றை விற்று வருகின்றன. எனவே மிகப்பெரிய அளவில் இந்த வியாபாரங்களில் ஆன் லைன் நிறுவனங்கள் வளர்ந்தால் கோடிக்கணக்கான மக்களின் வேலைகள் பறிபோய்விடும். ஏற்கனவே பல லட்சம் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தை இந்த நிறுவனங்கள் அழித்துவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
உறவுகள் அழிகிறார்கள்
இந்த நிறுவனங்கள் இப்போது அடிக்கடி தீபாவளி போன்ற பண்டிகை நெருங்கும் வேளையில் பிக்சேல் போட்டு இருக்கும் வியாபாரத்தையும் மொத்தமாக அபகரித்து வருகின்றன. கவர்ச்சியான தள்ளுபடியை பார்த்து பலரும் ஆன்லைனில் வாங்குவதால் தீபாவளி வியாபாரம் கூட பல கடைகளுக்கு குறைந்து வருகிறது. நமது ஊர்களில் கடை வைத்துள்ள அனைவருமே ஒரு வகையில் நம்முடைய நண்பர்கள், சொந்தகள், உறவுகள், தெரிந்தவர்கள் என்ற வகையில் தான் வருவார்கள். இவர்கள் தான் இப்போது ஆன்லைன் நிறுவனங்களால் அழிந்து வருகிறார்கள். இப்படி இந்தியாவின் மொத்த சில்லறை வணிகத்தையும் காலி செய்யும் ஆன் லைன்நிறுவனங்களுக்கு அரசு முக்கணாங்கயிறு போட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.