கவனம்.. ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.. கூட்டணி கட்சிகளை சம்மதிக்க வைத்த யுக்தி.. நெகிழ்ச்சி பின்னணி!
சென்னை: திமுக தனது கூட்டணியில் இருக்கும் கட்சிகளை குறைந்த தொகுதிக்கு சம்மதிக்க வைத்தது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.. காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட 25 தொகுதிக்கு சம்மதம் தெரிவித்தது எப்படி என்று தெரிய வந்துள்ளது.. இதற்கு திமுக முக்கியமான சமாதான யுக்தி ஒன்றை பயன்படுத்தி உள்ளது!
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஒரு சில கட்சிகளுடன் திமுக ஆலோசனை செய்ய உள்ளது. நாளை இதற்கான ஆலோசனை நடக்கும்.
நாளை பிற்பகலுக்குள் மொத்தமாக திமுக கூட்டணி இறுதி செய்யப்படும். அதன்பின் 10ம் தேதி திமுக தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும். 9ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் சின்ன ஆலோசனை நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
உறுதியானது.. திமுக கூட்டணியில் காங்.க்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு..குமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கீடு
கண்டிப்பு
இதுவரை நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கூட்டணி கட்சிகளிடம் திமுக மிகவும் கறாராக இருந்ததாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது . இவ்வளவு இடம்தான் கொடுப்போம், அதற்கு மேல் கொடுக்க முடியாது, கூட்டணி உடைந்தாலும் பரவாயில்லை என்று திமுக மிகவும் கண்டிப்பாக இருந்ததாக செய்திகள் வந்தது. இந்த நிலையில் விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஸ்டாலின் சம்மதிக்க வைத்தது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஸ்டாலின் சொன்னது என்ன
கூட்டணி கட்சிகளிடம் ஸ்டாலின் சொன்னது என்ன என்பது குறித்து திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளன. அதன்படி, திமுக தனது கோரிக்கையை உறுதியாக வைத்தாலும் எந்த கட்சியையும் அவமானப்படுத்தும் வகையிலோ, கோபப்படுத்தும் வகையிலோ பேசவில்லை. காங்கிரஸ் தவிர எல்லா கட்சியிடமும் முதலில் 2 சீட் கொடுக்கிறோம் என்றுதான் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
உயர்த்தியது
அதன்பின் ஒவ்வொரு கட்சியின் பலத்திற்கு ஏற்ற இடங்களை திமுக உயர்த்தி இருக்கிறது. இதில் விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேசிய ஸ்டாலின்.. உங்களுக்கு குறைந்த இடம் கொடுக்கும் எண்ணம், திட்டம் எல்லாம் இல்லை. இப்போது இதைவிட வேறு வழியில்லை. உங்களை அழிக்க வேண்டும் என்று விருப்பம் இல்லை. அதேபோல் கூட்டணியை விட்டு அனுப்பும் எண்ணமும் எங்களுக்கு இல்லை.
கூட்டணி இருக்க வேண்டும்
இந்த கூட்டணி தொடர வேண்டும். ஆனால் அதிக இடங்களை கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது . இதை புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஆட்சியில் இடம் இருக்கும். கவலைவேண்டாம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இரண்டு விஷயங்களை அவர் காரணமாக குறிப்பிட்டுள்ளார். 54 இடங்களைத்தான் கூட்டணிக்கு மொத்தமாக ஒதுக்குவோம். மீதம் உள்ள 180 இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம்.
ஆட்சி நிலைக்கும்
அப்போதுதான் 140 இடங்களிலாவது வெல்ல முடியும். அப்போதுதான் ஆட்சியில் 5 வருடம் நிலைக்க முடியும். இல்லையென்றால் கர்நாடகா, மத்திய பிரதேசம் போல ஆகிவிடும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.அதோடு பெரும்பான்மை இருந்தால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். மைனாரிட்டி அரசாக இருந்தால் சுதந்திரமாக திட்டங்களை கொண்டு வர முடியாது.
அனுபவம்
ஏற்கனவே மைனாரிட்டி அரசாக இருந்த நிறைய அனுபவபட்டுவிட்டோம் என்று ஸ்டாலின் வெளிப்படையாக விசிக, மதிமுக கட்சிகளிடம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியிடமும் இதே கூறியுள்ளார். ஆட்சி நீடிக்க வேண்டும் என்றே ஒரே நோக்கம்தான். கண்டிப்பாக உங்களுக்கு ஆட்சியில் பங்கு இருக்கும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நோக்கம்
எந்த காரணம் கொண்டும் தேர்தல் வெற்றிக்கு பின் இந்த ஆட்சிக்கு பங்கம் வர கூடாது. உங்களுக்கு குறைந்த தொகுதி கொடுத்தாலும் அதில் எல்லாம் நீங்கள் வெற்றிபெற வேண்டியதை திமுக உறுதி செய்யும். 6 இடங்கள் என்றால் 6 பேரும் வெற்றிபெறுவார்கள் என்று ஸ்டாலின் விசிக, மதிமுகவிற்கு நம்பிக்கை அளித்துள்ளார். இந்த தொடர் கோரிக்கைகளை தொடர்ந்தே கூட்டணி கட்சிகள் திமுகவின் கோரிக்கையை ஏற்றுள்ளது என்கிறார்கள்.