மே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது?
சென்னை: சென்னையில் கடந்த மே 11ம் தேதி 27.7% என்கிற அளவில் பாசிட்டிவ் விகிதம் இருந்த நிலையில் சரியாக ஒரு மாதத்தில் 3.5% என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கு காரணம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் ஆகும்.
Recommended Video
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மக்கள் தொகையுடன் தமிழ்நாட்டின் வேறு எந்த நகரத்தையோ அல்லது மாவட்டத்தையோ மக்கள் தொகையை வைத்து ஒப்பிட முடியாது. ஏனெனில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மிகப்பெரிய நகரமாகும். மக்கள் நெருக்கமும் மிக அதிகம் உள்ள நகரம் ஆகும்.
சென்னையில் திருவெற்றியூர் தொடங்கி சோழிங்கநல்லூர் வரையிலும், மெரினா கடற்கரை தொடங்கி போரூர் வரையிலும், ஆவடி தொடங்கி தாம்பரம் வரையிலும் மிகப்பெரிய அளவில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதி சென்னை..
காலையிலயே திருப்பூரில் குவிந்த கூட்டம்.. தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் திரும்பிய சோகம்
ககன்தீப் சிங் பேடி
இங்கு கொரோனா பரவல் கடந்த மே 12ம் தேதி தினசரி பாதிப்பு 7564 என்கிற அளவிற்கு உயர்ந்து இருந்தது. அந்த சமயத்தில் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். பேரிடர் காலங்களில் எல்லாம் இவரது செயல்பாடுகள் அசத்தியமானது என்பதால் இந்த பொறுப்பை ஸ்டாலின் ஒப்படைத்தார். ககன்தீப் சிங் பேடி எடுத்த பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக கொரோனா பரவல் சென்னையில் படிப்படியாக குறைய தொடங்கியது.
மாஸ்க் முக்கியம்
சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட போது, ககன் தீப் சிங் பேடி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நம்பிக்கை தளராமல் இருங்கள் நிச்சயம் கொரோனாவை வெல்வோம் என்றார். அவர் சொன்னது போலவே குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா பேராபத்துக் குறித்து பெரிய அளவில் மக்களுக்கு எல்லா வழியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்கள் விழிப்புணர்வு காரணமாக மாஸ்க் அணிய தொடங்கினர். தங்களை சுற்றி நடக்கும் பேராபத்தை புரிந்து கொண்டனர்,
ஆரம்ப நிலையில் கண்டறிந்தது
அடுத்ததாக அவர் செய்தது, முக்கியமானது, கொரோனா பாதித்தவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உத்தரவிட்டது. மற்றவர்களுக்கு பரவ விடாமல் அவர்களைத் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி மூலம் உரிய மருத்துவ உதவிகளை ஏற்படுத்தினார். அதாவது வீடு வீடாக சென்று காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டது மிகப்பெரிய பலனை கொடுத்தது. மேலும் சோதனையை தீவிரப்படுத்தினார் அதிகப்படியான சோதனைகள் தினசரி நடத்தப்பட்டது. அத்துடன் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களுக்காக மருத்துவர்கள் நியமித்து ஆலோசனைகளை வழங்கினார்.
வசதிகள் அதிகரித்தது
மூன்றாவதாக கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை வசதிகள் போன்றவற்றை சுகாதாரத்துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்து கிடைக்க வழிவகை செய்தார் இதனால் சென்னையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி, ஐசியு வசதி என எல்லாமே கிடைக்கிறது. இதன் காரணமாக தற்போது அச்சம் குறைந்துள்ளது.
வெளியே வரவில்லை
நான்காவது முக்கியமானது அரசு அறிவித்த முழு ஊரடங்கு, அதுவும் தளர்வுகளற்ற ஊரடங்கு. இதுவே இன்றைக்கு சுவாசத்தை பெற சென்னைக்கும் சென்னை மக்களுக்கும் உதவி இருக்கிறது.. மக்கள் வீடுகளை விட்டு இரண்டு வாரம் வெளியே வரவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் காய்ச்சல் முகாம் விரைவுபடுத்தப்பட்டது, மக்களிடையே நோய் குறித்த அச்சத்தை குறைக்க முயற்சிக்கப்பட்டது. நோயாளிகளை விரைவாக கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெறும் 2 சதவீதம் பாதிப்பு
கடைசியாக மிக முக்கியமானது தடுப்பூசி. தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டது. மக்கள் பலர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிகத்திலேயே அதிக தடுப்பூசி போடப்பட்டிருப்பது சென்னையில் தான். சென்னையில் தற்போது 10842 ஆக்டிவ் நோயாளிகள் மட்டுமே உள்ளனர். மணலி, தண்டையார் பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று மண்டலத்தில் மட்டுமே 3 சதவீதம் நோயாளிகள் உள்ளனர். மற்ற மண்டலங்களில் 2 சதவீதம் மற்றும் ஒரு சதவீதம் அளவிற்கே உள்ளனர். சென்னையில் 96சதவீதம் பேர் குணமாகிவிட்டனர். 2 சதவீதம் நோயாளிகளே உள்ளனர். சென்னை மெல்ல மெல்ல மூச்சுவிடத்தொடங்கிவிட்டது. ஆம் மெரினாவின் காற்றை சென்னை சுவாசிக்க தொடங்கிவிட்டது. உப்புக்காற்றின் சுவையை உணர தொடங்கிவிட்டது. சுவை இழப்பு மறைந்து வருகிறது.