கடைசியாக முகத்தை கூட பார்க்க முடியாது.. கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி அடக்கம் செய்யப்படுகிறது?
சென்னை: கொரோனா பாதிப்பில் உயிரிழப்பவரின் முகத்தைக்கூட குடும்பத்தினரால் கடைசியாக ஒருமுறை பார்க்க கூட முடியாத கொடூரமான சூழல் நிலவுகிறது. கொரோனாவால் இறந்தவர் உடல் தமிழகத்தில் எப்படி அடக்கம் செய்யப்படுகிறது தெரியுமா? தெரிந்தால் நிச்சயம் அதன் தீவிரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
எல்லாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையை காரணம் காட்டி ஊரடங்கு பிறப்பித்ததை ஏற்றுகொள்ள முடியாத நிலை இருக்கலாம். நிச்சயம் அவர்களின் வேதனை நியாயமானது. ஆனால் கொரோனா என்ற கொடிய வைரஸ்க்கு அது எதுவும் தெரியாது. உங்களை சுற்றி உள்ளவர்கள் அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியாமலேயே உங்களுக்கு பரப்பி விடுவார்.
அறிகுறிகள் தெரிய சிலருக்கு 14 நாட்கள் வரை கூட ஆகிறது. எனவே அதற்கு அவர்கள் பலருடன் பேசுவது பழகுவதால் கொரோனா எத்தனை பேருக்கு பரவும் என்பதை யோசித்து பாருங்கள். அத்துடன் அவரிடம் இருந்து நோயை வாங்கியவர். எத்தனை பேருக்கு பரப்பி இருப்பார். அதன்பிறகு சங்கிலி தொடர் போல் பரவி விடும். இதனால் குறைந்த நாட்களிலேயே பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இதில் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் என்பது மருத்துவர்களுக்கே தெரியாது. ஏனெனில் மருந்துகள் இல்லை. தடுப்பூசியும் இல்லை. சொல்லப்போனால் அவர்களின் உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லை. மரணத்துடன் போராடிதான் சிகிச்சை அளிக்கிறார்கள்.
பயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை!
கொரோனா பரப்பி விடும்
நான் மேலே சொன்ன எல்லாமே நோய் எப்படி பரவுகிறது. அதன்விளைவுகள் எப்படி என்பது பற்றித்தான். இப்போது சொல்லப்போவது தான் மிக கொடூரமான விஷயம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவரது குடும்பத்தினருக்கு கொரோனாவை பரப்பி விடுவதுடன், அவர் இறந்துவிட்டால் அவரது உடலை கூட குடும்பத்தால் கடைசியாக ஒருமுறை பார்க்க முடியாது என்ற நிலையே நிலவுகிறது.
எப்படி அடக்கம் செய்கிறார்கள்
அப்படி ஒரு சோக சம்பவம்தான் தமிழகத்தில் வேலூரில் நடந்துள்ளது.. கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை முன்னெச்சரிக்கையாக ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்தார்கள். அவரது உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சாதாரண துணியைக் கொண்டு 3 அடுக்குகள் உடலில் சுற்றப்பட்டது. அடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்து மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து பிரத்யேக வாகனத்தில் உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் ஐந்து பேர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதை செய்யும் இவர்கள் 5 பேரும் முழுஉடல் பாதுகாப்பு உடை, கவசங்களை அணிந்து கொண்டிருந்தார்கள்.
உடைகள் எரிப்பு
உறவினர்கள் யாருமே அருகில் அனுமதிக்கப்படவில்லை. உடல் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டில் 12 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில் அதிக அளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது அதில் உடல் இறக்கப்பட்டு மண் போட்டு மூடப்பட்டது. மண் மூடிய பிறகும் அந்த இடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மதச் சடங்குகளும் 20 அடி தள்ளி நின்றபடியே நடத்தப்பட்டது.. இறுதியாக அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பு உடைமைகள் அங்கேயே அருகில் தீயிட்டு கொளுத்தப்பட்டது. தூய்மை பணியாளர்களின் உடல் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். அங்கு வந்த அனைவரின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
வரும் முன் காப்போம்
கடைசியாக ஒருமுறை இறந்தவரின் முகத்தை கூட யாரும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டதுதான் உச்சக்கட்ட கொடுமை.. எந்த குடும்பத்தினராலும் இப்படி ஒரு சூழலை ஜீரணிப்பதும் கடினம் என்றாலும், நிர்ப்பந்தமும் நிலைமையும், யதார்த்தமும் இதுதான்!! தொற்று ஏற்பட்டு யார் இறந்தாலும் அவர்களும் இப்படித்தான் அடக்கம் செய்யப்படுவார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருமுறை வைரஸ் தொற்று உறுதியாகி விட்டால், அதோடு அவரை நாம் பார்ப்பது என்பது அரிதுதான்.. அடிப்படையிலேயே அன்பு, பாசத்தில் பிணையப்பட்ட நம்மால், இப்படி ஒரு கடினமான சூழலை எதிர்கொள்ள முடியுமா சந்தேகம்தான்.. அதனால் முடிந்தவரை இந்த வைரஸ் அரக்கனை அண்டவிடாமல் இருப்பதுதான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே வழி.. அதைதான் இந்த வேலூர் மரணத்தின் அடக்கமும் நமக்கு உணர்த்தி விட்டு போயுள்ளது!