ஊரடங்கு ஏன் முக்கியமானது? இதன் மூலம் கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியுமா? முழு விளக்கம்
சென்னை: கொரோனா 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊரடங்கு மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இரண்டாம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மே 10 முதல் 2 வாரங்களுக்கு முழு லாக்டவுன்- எவை எல்லாம் செயல்பட அனுமதி? முழு விவரம்!
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு
கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களும் முழு ஊரடங்கை அறிவித்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் மளிகை, காய்கறி, மருந்தகம், இறைச்சி கடைகளைத் தவிரப் பிற கடைகள் இயங்க அனுமதி இல்லை. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்படலாம், உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. மேலும் முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உதவுமா?
இருப்பினும், அனைவரிடமும் இருக்கும் ஒரே கேள்வி, ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்த உதவுமா என்பது தான். முதல் அலையின் போது லாக்டவுன் காரணமாக கொரோனா பரவல் வேகம் குறைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், 2ஆம் அலையில் உருமாறிய கொரோனாவால் வைரஸ் பரவல் விகிதம் அதிகரித்துள்ளதால் லாக்டவுன் அதே அளவு பலன் தருமா என்பது முக்கிய கேள்வி.
வைரஸ் பரவல்
சமூகத்தில் எளிதாக வைரசால் பாதிக்கப்படுபவர்கள் (susceptible people) இருப்பார்கள். ஏற்கனவே, உடல்நிலை பாதிப்பு உடையவர்கள், இணை நோய் உள்ளவர்கள், மோசமான எதிர்ப்புச்சக்தியை உடையவர்களை கொரோனா எளிதாக தாக்கும். இவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வெளியே செல்வது, மக்களுடன் ஒன்றுகூடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வைரஸ் பரவல் பல மடங்கு அதிகரிக்கிறது.
வைரஸ் பரவல் வேகம் குறைகிறது
ஊரடங்கு மூலம் வைரஸ் பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு இருந்தவரை எளிதாக வைரசால் பாதிக்கப்படுபவர்கள் வீடுகளிலேயே இருந்தனர். இதனால் வைரஸ் பரவலின் வேகம் குறைந்திருந்தது. அதேநேரம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே வைரஸ் பரவல் வேகம் மூன்று மடங்கு வரை அதிகமாக இருந்தது.
கொரோனா உயிரிழப்புகள்
இதைவிட முக்கியமாக ஊரடங்கு மூலம் கொரோனா உயிரிழப்புகள் குறைவது அனைத்து ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்ட ஒன்று. அதிலும் தற்போது கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 3% எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு கொரோனா பரவலால் ஏற்பட்ட உயிரிழப்பை விட அதிகம். கொரோனா பரவின் வேகம் ஊரடங்கு மூலம் கட்டுப்படுத்தும்போதும், மிக மோசமாகப் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனால் உயிரிழப்புகளைப் பெருவாரியாகக் கட்டுப்படுத்த முடிகிறது.
உயிரிழப்பு குறைகிறது
தற்போது டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் படுக்கைகள் கிடைக்காமல் போவது உள்ளிட்டவை காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. ஊரடங்கு மூலம் வைரஸ் பரவும் வேகம் கட்டுப்படுத்தப்படுவதால், சுகாதாரத் துறை கட்டமைப்பில் இருக்கும் அழுத்தம் குறைக்கப்படுகிறது. அதாவது தீவிர பாதிப்பு உடையவர்களுக்குச் சரியான சிகிச்சை கிடைப்பதால், உயிரிழப்புகள் குறைகிறது.
மகாராஷ்டிரா 144 தடை உத்தரவு
கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அங்கு வைரஸ் பரவல் வேகம் குறைக்கப்பட்டது. இதேபோல தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையான நடவடிக்கை
ஊரடங்கு வைரஸ் பரவல் வேகத்தைக் குறைக்கிறது என்றாலும், அதனால் பொதுமக்களுக்கு வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. மக்களைக் காக்க ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. ஆனால், அதே ஊரடங்கால் மக்கள் உணவின்றி அவதிப்படும் சூழல் உருவாகிவிடக் கூடாது. இவையெல்லாம் மனதில் வைத்துக்கொண்ட ஊரடங்கை அமல்படுத்தப்பட வேண்டும்.