40 கேட்டீங்க 20 தரோம்.. எங்க மடியில் கை வைத்தால் எப்படி?.. இதுதான் அதிமுக- பாஜக இழுபறிக்கு காரணம்?
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி எண்ணிக்கையில் அதிருப்தி இருக்கும் போதிலும் அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளையே பாஜக கேட்பதால் இன்னும் இழுபறி நீடிக்கிறது.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்தாலும் அறிவித்தார்கள், பெரிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுக ஒரு பக்கம் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அது போல் அதிமுகவும் நடத்தி வருகிறது. முதலில் பாமகவுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிமுக அவர்களுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது.
ஒதுக்கிய தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் இருந்த போது பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை காட்டிலும் தற்போது ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்றாலும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஒப்புக் கொண்டதால் குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டோம் என பாமக கூறியது. இதற்கு அடுத்த பாஜகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
40 தொகுதிகள்
நேற்று முன் தினம் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. தமிழக சட்டசபையில் தங்கள் கட்சி பிரதிநிதி இருக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதிலும் இரட்டை இலக்கத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறது. இதனால் 40 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் இரட்டை இலக்க வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறது.
18 தொகுதிகள்
ஆனால் அதிமுகவோ அவ்வளவு தொகுதிகள் கொடுக்க இயலாது என தெரிவித்ததோடு 18 தொகுதிகளை கொடுப்பதாக ஒப்புக் கொண்டது. இந்த 18 இல் பாதிக்கு பாதி ஜெயிக்க வாய்ப்பிருந்தாலும் ஒற்றை இலக்கத்தில்தானே வரும் என்பதால் பாஜக பிடிவாதம் பிடித்தது. இதையடுத்து நேற்றும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
வெற்றிக்கு இலக்கு
இதில் 18-லிருந்து 20 தொகுதிகளுக்கு அதிமுக இறங்கி வந்துள்ளது. முதலில் முடியாது என கூறிய பாஜக பின்னர் அதற்கு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற என்ன வழி என பாஜக யோசித்தது.
தென் மாவட்டங்கள்
அதன்படி கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜக கேட்கிறதாம். ஆனால் அந்த தொகுதிகளில்தான் அதிமுகவுக்கு வாக்கு வங்கியும் செல்வாக்கும் இருக்கிறது. இதனால் அவற்றை தர அதிமுக முன்வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணி வாக்கு வங்கி பிரியாமல் இருக்க அமமுகவை இணைத்து கொள்ளுமாறு அமித்ஷா சொன்னதாக சொல்லப்படுகிறது.
என்ன நடக்கும்?
இதற்கு அதிமுகவோ மறுக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் சசிகலாவுடன் இணக்கமாக செல்வது குறித்து பேசப்பட்டதாம். ஆனால் இதையும் அதிமுக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு வேளை தேமுதிக வெளியேறிவிட்டால், அந்த கட்சிக்கு ஒதுக்கியிருந்த எண்ணிக்கை பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எனவே பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதாவது தேமுதிகவின் அறிவிப்புக்கு பிறகு வெளியாகும் என தெரிகிறது.