தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா தொற்று... 67 பேர் மரணம்... 5,603 பேர் டிஸ்சார்ஜ்..!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,08,885 ஆகும். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் அடங்குவர்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 5,603பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5,52,938 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையில் 10 இடங்களில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9,653 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை, சிறுநீரகப் பாதிப்பு, இதயப்பிரச்சனை என இணை வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் அருகே பெரும் அதிர்ச்சி.. சாலையோரத்தில் சிதறி கிடந்த கொரோனா சளி மாதிரிகள்.. மக்கள் பீதி
மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவும் உள்ளது.