கோவில் நிலங்களை விற்க அறநிலைய துறையை அரசு வற்புறுத்துகிறதா?.. ஹைகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி
சென்னை: கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரங்கள் இல்லாமல் பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆக்கிரமிப்பு நிலம்
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறப்பட்டிருந்தது.
பிறகு முடிவு
கோவில் நிலங்களை பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதிப்பு இல்லை
கோவிலுக்கு தேவைப்படாத நிலைங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு மத வழிபாட்டு தளங்கள்
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பிறபித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிப்பாட்டு தளங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மத வழிப்பாட்டு தளங்களுக்கு கிடையாதா? என கேள்வி எழுப்பினர்.
விற்க வற்புறுத்தலா
இந்த அரசாணை மூலம் கோவில் நிலங்களை விற்க அறநிலைய துறையை அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனை அளிக்கும்?
இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.
எவ்வளவு ஆக்கிரமிப்பு
மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் தொடர்பான விவரங்களை இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அரசாணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதிக் குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.